இந்திய பகுதிகளை பறிக்கும் வல்லமை எந்த நாட்டுக்கும் இல்லை- நரேந்திர மோடி
இடாநகர்: இந்தியாவின் பகுதியை பறித்துக் கொள்ளக் கூடிய வல்லமை உலகில் எந்த ஒரு நாட்டுக்குமே இல்லை என்று பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
அருணாசலப்பிரதேசத்தின் பசிகாட்டில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் நரேந்திர மோடி பேசியதாவது:
சுவிட்சர்லாந்தை போல அழகான இடம் அருணாசலப்பிரதேசம். இந்த மாநிலத்தில் 3 ஹெச் (H)தான் ஏராளமான வேலை வாய்ப்பை வழங்கி இருக்கிறது. ஹெர்பல் (மூலிகைகள்), ஹார்ட்டிகல்சர் (தோட்டக்கலை), ஹேண்டிகிராப்ட்ஸ் (கைவினை பொருட்கள்) ஆகியவைதான் அந்த 3 ஹெச்.

நாட்டின் அனைத்து பகுதி மக்களின் உணர்வுப்பூர்வமான பிரச்சனைகளுக்கு தீர்வு காணக்கூடிய அரசுதான் டெல்லியில் அமைய வேண்டும். அருணாசலப்பிரதேச மாநிலத்தில் சூரிய மின்சக்தியும் காற்றாலை மின் உற்பத்தியும் பயன்படுத்தப்படாமல் இருக்கிறது.
அருணாச்சல பிரதேச மக்கள் தீரமிக்கவர்கள். சீனாவின் அத்தனை அச்சுறுத்தல்களுக்கும் அடிபணியாமல் இருக்கின்றனர் சீனாவுடனான போரின் போது ஜெய்ஹிந்த் என்ற முழக்கம் இந்த மண்ணில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
டெல்லியில் படுகொலை செய்யப்பட்ட நிடோவின் மரணத்துக்கு அஞ்சலி செலுத்துகிறேன். நாட்டின் கிழக்குப் பகுதியான அருணாசலப் பிரதேசத்தையும் மேற்கு பகுதியான குஜராத்தையும் இணைந்ததாகவே இந்த நாடு இருக்கிறது.
நமது நாட்டின் எந்த ஒரு பகுதியையும் பறித்துவிடக் கூடிய வல்லமை உலகில் எந்த ஒரு நாட்டுக்குமே இல்லை. காங்கிரஸ் பரம்பரை அரசியல் செய்து வருகிறது; உங்களின் மிகப் பெரிய பிரச்னை வளர்ச்சி தான்.
மக்களை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல பாரதிய ஜனதா கட்சி உறுதி பூண்டுள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் தாமரையும் மலரும். மத்தியில் தாமரை ஆட்சி மலர்ந்தால் வளமும் வளர்ச்சியும் பெருகும்.
இவ்வாறு நரேந்திர மோடி பேசினார்.












Click it and Unblock the Notifications