உபி சட்டசபை தேர்தல்..சமாஜ்வாடி கூட்டணி 300 இடங்களை கைப்பற்றும்.. அகிலேஷ் யாதவ்
நாட்டின் பிரதமராகும் எண்ணம் ஏதும் தமக்கு இல்லை என்று அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.
லக்னோ: உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தலில் சமாஜ்வாடி கூட்டணி 300க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெறும் என முதல்வர் அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் சட்டசபை தேர்தல் 7 கட்டமாக நடக்கிறது. முதல் கட்ட வாக்குப்பதிவு வருகிற 11-ந் தேதி தொடங்குகிறது. இறுதிக்கட்ட வாக்குப்பதிவு மார்ச் 8-ந் தேதி நடக்கிறது. அங்கு ஆளும் சமாஜ்வாடி கட்சியுடன் காங்கிரஸ் கைகோர்த்துள்ளது. பாரதிய ஜனதா கட்சி ஒரு அணியாகவும், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி ஒரு அணியாகவும் தேர்தலை சந்திக்கிறது.
கூட்டணி உருவானதற்கு பிறகு முதல்முறையாக ராகுல் காந்தியும், அகிலேஷ் யாதவும் கூட்டாக பிரசாரத்தை தொடங்கியுள்ளனர். இந்நிலையில் அகிலேஷ் யாதவ் தனியார் தொலைக்காட்சி நிறுவனம் சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:- உத்தரப்பிரதேச அரசியலிலேயே நீடித்து இருக்க விரும்புகிறேன். பிரதமர் ஆக வேண்டும் என்ற கனவு எல்லாம் எனக்கு இல்லை.
டெல்லி அரசியலில் இருந்து தள்ளி இருப்பவர்கள் மகிழ்ச்சியானவர்கள். எனது அரசின் திட்டங்களால் பலன் பெற்ற 50 சதவீத உத்தரப்பிரதேச மக்கள் எங்களுக்கு வாக்களித்தலே போதும். இந்தத் தேர்தலில் நாங்கள் 300 இடங்களில் வெற்றி பெற்று விடுவோம். முலாயம் சிங்கின் ஆதரவு தங்களுக்கு முழுமையாக உள்ளதாக தெரிவித்த அகிலேஷ் யாதவ், தேர்தல் பிரச்சாரத்தில் அவர் ஈடுபட உள்ளதாகவும் கூறினார்.