ஹர்திக் பட்டேலுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்த குஜராத் நீதிமன்றம்
காந்திநகர்: எம்எல்ஏ அலுவலகத்தை தாக்கிய வழக்கில் குஜராத்தை சேர்ந்த பட்டேல் இன தலைவர் ஹர்திக் பட்டேலுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட்டை, நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
உள்ளூர் எம்எல்ஏ அலுவலகத்தை சூறையாடிய வழக்கில், விஸ்நகர் நீதிமன்றம் இன்று இந்த வாரண்ட்டை பிறப்பித்துள்ளது. மற்றொரு தலைவரான லால்ஜி பட்டேலுக்கு எதிராகவும் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குஜராத்தில் வரும் டிசம்பர் மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சி துணை தலைவர் ராகுல் காந்தி சமீபத்தில் ஹோட்டல் ஒன்றில் ஹர்திக் பட்டேலை ரகசியமாக சந்தித்து பேசியதாக சிசிடிவி காட்சிகள் சில ஊடகங்களில் வெளியானது.
ஹர்திக் பட்டேல் எந்த கட்சிக்கு ஆதரவு அளிக்கிறாரோ, அந்த கட்சிக்கு தேர்தலில் அது கணிசமான லாபத்தை ஈட்டித் தரும். எனவே பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளில் அவர் எதற்கு ஆதரவு அளிப்பார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
சமீபத்தில் அளித்த பேட்டியில், இட ஒதுக்கீடு கோரிக்கைக்கு செவி சாய்த்தால், பட்டேல் இனத்தவர்கள் சார்பில், காங்கிரசை ஆதரிப்பதில் தவறில்லை. பாஜக பெரிய திருடன் என்றால் காங்கிரஸ் சின்ன திருடன், அவ்வளவுதான் என்று கூறியிருந்தார்.