பிரிட்டன் குடிமகனா ராகுல் ? விளக்கம் கேட்டு நாடாளுமன்ற நன்னெறிக் குழு நோட்டீஸ்
டெல்லி: இரட்டை குடியுரிமை பிரச்சினைத் தொடர்பாக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்திக்கு நாடாளுமன்ற நன்னெறிக் குழு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். 2009 ஆம் ஆண்டு பிரிட்டன் நிறுவனம் ஒன்று வெளியிட்ட ஆவணத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரிட்டன் குடியுரிமை பெற்றவர் என குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, அவரது எம்.பி பதவியை ரத்து செய்வதோடு, அவரது இந்திய குடியுரிமையும் ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தியிருந்தார். மேலும், அவர் மக்களவைத் தலைவருக்கும் கடிதம் எழுதியிருந்தார்.
மேலும், ராகுல் காந்தியின் இந்த இரட்டை குடியுரிமை குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாஜக எம்.பி. மகேஷ் கிரி மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் கடிதம் எழுதினார். சுமித்ரா மகாஜன், இகுறித்து விசாரிப்பதற்காக பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி தலைமையிலான நன்னெறிக் குழவுக்கு அனுப்பினார். இதை விசாரித்த அத்வானி தலைமையிலான 11 பேர் அடங்கிய குழு, இரட்டை குடியுரிமை குறித்து விளக்கம் அளிக்குமாறு ராகுல் காந்திக்கு திங்கள்கிழமை நோட்டீஸ் அனுப்பியது.
லண்டனிலிருந்த போது ராகுல் காந்தி எவ்வாறு இங்கிலாந்து குடிமகன் என குறிப்பிட்டார் என்பது குறித்து விளக்கம் அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது என நன்னெறிக் குழுவின் உறுப்பினர் அர்ஜூன் ராம் மேக்வால் நாடாளுமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசுகையில் குறிப்பிட்டார். இதுகுறித்து கருத்து தெரிவித்த ராகுல் காந்தி, பிரச்சினையை எதிர் கொள்ள தயாராக இருப்பதாக தெரிவித்தார்.