செப்டம்பரில் அமெரிக்காவுக்கு வருமாறு மோடிக்கு ஒபாமா கடிதம் மூலம் அழைப்பு
டெல்லி: அமெரிக்காவுக்கு வருமாறு அதிபர் ஒபாமா பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் மூலம் அழைப்பு விடுத்துள்ளார். இந்த அழைப்பு கடிதத்தை அமெரிக்க துணை வெளியுறவு செயலாளர் வில்லியம்ஸ் பர்ன்ஸ் மோடியை சந்தித்து அவரிடம் அளித்தார்.
அமெரிக்காவுக்கு வருமாறு அதிபர் பாரக் ஒபாமா பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளார். இது குறித்த அழைப்பு கடிதத்தை அமெரிக்க துணை வெளியுறவு செயலாளரான வில்லியம்ஸ் பர்ன்ஸ் இன்று மோடியை சந்தித்து அவரிடம் அளித்துள்ளார்.
செப்டம்பர் மாதம் வாஷிங்டன் வருமாறு ஒபாமா தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்தியா-அமெரிக்கா இடையேயான உறவை மேம்படுத்த நாம் கூட்டாக பணிபுரிய வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
தனது அமெரிக்கா பயணம் பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்றும், இருநாட்டு உறவை மேம்படுத்தும் வகையில் இருக்க வேண்டும் என்றும் தான் விரும்புவதாக மோடி கடிதத்தை வாங்கும்போது தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், உலகின் பழமையான மற்றும் பெரிய ஜனநாயகங்கள் இடையேயான உறவு இருநாட்டுக்கு மட்டும் உதவாமல், அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் உலகம் வளம் பெற ஒரு சக்தியாக மாற வேண்டும் என்றார். தன்னை அமெரிக்காவுக்கு அழைத்த ஒபாமாவுக்கு மோடி நன்றி தெரிவித்துள்ளார்.