ஒபாமா-நவாஸ் ஷெரிப் பேச்சுவார்த்தை: திரைக்கதை எழுதிய பாகிஸ்தானை அம்பலப்படுத்திய அமெரிக்கா!
டெல்லி: அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப்புடன் தொலைபேசியில் பேசியதாக அமெரிக்க வெள்ளை மாளிகை ஒரு செய்திக்குறிப்பை வெளியிட்டுள்ள நிலையில், பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு முற்றிலும் மாறுபட்டதாக உள்ளது. உண்மை கதை ஒன்றாக இருக்க, அதில் நன்கு மசாலா தடவி திரைக்கதை வடித்துள்ளது பாகிஸ்தான் என்பது இவ்விரு அறிக்கைகளையும் படித்து பார்த்தால் தெரியும்.
ஷெரிப்புடன் பேச்சு
வரும் ஜனவரி 26ம்தேதி, நடைபெறும் இந்திய குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க அமெரிக்க அதிபர் ஒபாமா சம்மதித்துள்ளார். இந்த தகவல் வெளியான மறுநாளே, மரியாதை நிமித்தமாக பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப்புக்கு ஒபாமா தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.
வெள்ளை மாளிகை தகவல்
இந்த தொலைபேசி உரையாடல் குறித்து அமெரிக்க வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு இதோ:பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப்புடன், அதிபர் ஒபாமா தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆலோசனை நடத்தினார். பாகிஸ்தான் மற்றும் அந்த பிராந்தியத்தின் பாதுகாப்பு, நிலையானதன்மை, மற்றும் வளம் ஆகியவற்றை காப்பாற்றுவதில் அமெரிக்கா மற்றும் பாகிஸ்தான் நாடுகள் இணைந்து காண்பிக்க வேண்டிய அக்கறை குறித்து அப்போது விவாதிக்கப்பட்டது.
தீவிரவாதத்திற்கு எதிராக போர்
இரு நாடுகளுக்கு நடுவேயான உறவின் அவசியத்தை ஒப்புக்கொண்ட இரு தலைவர்களும், நல்லுறவை பேணுவதற்கு பேச்சுவார்த்தை அவசியம் என்பதை வலியுறுத்திக் கொண்டனர். தீவிரவாதத்திற்கு எதிராக போரிடுவதன் மூலமாக, பாகிஸ்தான் பிராந்தியத்தில் நிலையான தன்மையையும் அமைதியையும் கொண்டுவர வேண்டியதன் அவசியத்தை இருதலைவர்களும் மீண்டும் வலியுறுத்திக் கொண்டனர். ஆப்கானிஸ்தான் அரசுடன் பாகிஸ்தான் அரசு தனது உறவை பலப்படுத்தி வருவதற்கு அதிபர் வரவேற்பு தெரிவித்தார். இவ்வாறு வெள்ளை மாளிகை அறிக்கை தெரிவிக்கிறது.
பாகிஸ்தானின் மசாலா அறிக்கை
இப்போது நமது அண்டை நாடு வெளியிட்ட அறிக்கையை படித்து பாருங்கள். அவர்களின் கற்பனை திறன் நன்கு புலப்படும். பாகிஸ்தான் வெளியுறவுத்துறை வெளியிட்ட அறிக்கை: பிரதமர் நவாஸ் ஷெரிப்பை, அமெரிக்க அதிபர் ஒபாமா தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். இரு நாடுகளுக்கிடையேயான உறவு குறித்து அப்போது ஆலோசிக்கப்பட்டது. வாஷிங்டன்னில் கடந்த அக்டோபர் மாதம் நவாஸ் ஷெரிப்-ஒபாமா சந்தித்துக் கொண்டதையும், தனக்கு அளிக்கப்பட்ட சிறந்த வரவேற்பு குறித்தும் பிரதமர் நினைவு கூர்ந்தார்.
பாகிஸ்தான் பொருளாதாரம் வளர்ந்து விட்டதாமே..
தனது அரசு கடந்த ஆண்டு பதவிக்கு வந்தது முதல் பாகிஸ்தான்-அமெரிக்கா உறவில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதை பிரதமர் நினைவு கூர்ந்தார். பாகிஸ்தான்-அமெரிக்க உறவு மேம்பட்டுள்ளது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த ஒபாமா, பாகிஸ்தானின் பொருளாதார முன்னேற்றத்திற்கு இந்த அரசு எடுத்துள்ள முயற்சிகளுக்கும், சவால்களில் இருந்து வெற்றிகரமாக மீண்டும் வந்தமைக்காகவும் வாழ்த்து தெரிவித்தார்.
ஒபாமா உறுதியளித்தார்
இந்தியாவுக்கு தான் பயணிக்க உள்ளதாகவும் ஒபாமா அப்போது கூறினார். வாஷிங்டன்னில் ஒபாமாவை நேரில் சந்தித்து பாகிஸ்தானுக்கு வருமாறு தான் அழைப்பு விடுத்ததை நினைவு கூர்ந்த பிரதமர், பாகிஸ்தான் மக்கள், அமெரிக்க அதிபரின் வருகைக்காக எதிர்பார்த்துள்ளதாக தெரிவித்தார். பாகிஸ்தானில் நிலைமை சரியானதும் மிக விரைவில் அங்கு சுற்றுப்பயணம் வர தயாராக இருப்பதாக ஒபாமா கூறினார்.
ஆப்கானிஸ்தானுடன் நல்ல உறவு
ஆப்கானிஸ்தானுடன், பாகிஸ்தான் மேற்கொண்டுவரும் நல்லுறவை சுட்டிக் காண்பித்த நவாஸ் ஷெரிப் சமீபத்தில் இஸ்லாமாபாத்திற்கு ஆப்கன் அதிபர் அஷ்ரப் கானி வந்ததையும் குறிப்பிட்டார். இந்த பிராந்தியத்தின் அமைதிக்காக பாகிஸ்தான் எடுத்துள்ள முயற்சிகளுக்காக ஒபாமா பாராட்டு தெரிவித்தார்.
சார்.. இந்தியா எங்கள அடிச்சிடுச்சி சார்..
இந்தியாவிற்கு இந்தாண்டின் தொடக்கத்தில் தான் சென்று, இரு நாட்டு உறவுகள் மேம்பட முயன்றதை நினைவுபடுத்திய நவாஸ் ஷெரிப், ஆனால் அடுத்தடுத்து துரதிருஷ்டவசமான நடவடிக்கைகளை இந்தியா எடுத்ததாகவும் சுட்டிக் காண்பித்தார். இரு நாட்டு வெளிநாட்டு செயலர்கள் மத்தியிலான பேச்சு வார்த்தையை இந்தியா ரத்து செய்தது, எல்லையில் இந்திய ராணுவம் துப்பாக்கி சூடு நடத்துவது போன்றவற்றால் இரு நாடுகளுக்கிடையேயான உறவை இந்தியா பின்னோக்கி கொண்டு சென்றுவிட்டது என்றும் நவாஸ் ஷெரிப் தெரிவித்தார்.
காஷ்மீரை பற்றி பேசுங்களேன்
இந்தியா-பாகிஸ்தான் பேச்சு வார்த்தையை தொடர பாகிஸ்தான் தயாராக உள்ளதாகவும், இந்தியாதான் சிறந்த சூழ்நிலையை உருவாக்க வேண்டும் என்றும் நவாஸ் கேட்டுக் கொண்டார். பாகிஸ்தானின் நிலைப்பாட்டை புரிந்துகொள்வதாக ஒபாமா தெரிவித்தார். இந்திய வருகையின்போது, காஷ்மீர் விவகாரம் குறித்து இந்திய தலைமையிடம் பேசுமாறும் ஒபாமாவிடம் நவாஸ் ஷெரிப் கேட்டுக் கொண்டார்.
ஒபாமா-ஷெரிப் ஒருமித்த கருத்துபொது அக்கறையின்கீழ் அமெரிக்கா-பாகிஸ்தான் இணைந்து செயலாற்ற இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டதுடன், தெற்காசிய மண்டலத்தில் அமைதியையும், வளமையையும் கொண்டுவர முயற்சிக்க வேண்டும் என்பதிலும் ஒருமித்த கருத்துக்கு வந்தனர். இவ்வாறு பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
ஒற்றுமைகளை பாரீர்
இரு அறிக்கைகளுக்கும் இடையே உள்ள ஒற்றுமைகள்:
*அமெரிக்க அதிபர் ஒபாமா, நவாஸ் ஷெரிப்பு போன் செய்தார்,
*இரு நாடுகளின் உறவு பலப்பட வேண்டியது அவசியம்,
*ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் உறவு மேம்பட்டுள்ளதற்கு ஒபாமா பாராட்டு.
கப்சா கதைகளை பாருங்கள்..
பாகிஸ்தான் அறிக்கையிலுள்ள வேற்றுமைகள்:
*காஷ்மீர் பிரச்சினை குறித்து இந்தியாவுடன் பேச நவாஸ் ஷெரிப் கேட்டுக் கொண்டார்,
*எல்லையில் இந்தியா 'அத்துமீறுவதை' நவாஸ் ஷெரிப் கூறியதும், ஒபாமாவும் பாகிஸ்தான் நிலைமையை புரிந்து கொண்டார்,
*இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்ய உள்ள தகவலை ஒபாமாவே தெரிவித்தார்,
*பாகிஸ்தானில் பொருளாதாரம் மேம்பட்டு விட்டதாக ஒபாமா கூறினார்.
*தீவிரவாதத்திற்கு எதிராக போரிட வேண்டும் என்று இரு நாட்டு தலைவர்களும் ஒப்புக் கொண்டதாக அமெரிக்கா வெளியிட்ட தகவல், பாகிஸ்தான் அறிக்கையில் இல்லாதது.