ரூ.8 கோடி புதையலுக்காக மகளை நரபலி கொடுக்க முயன்ற பெற்றோர்
நாசிக்: மகாராஷ்டிராவில் புதையல் கிடைக்க வேண்டி தங்களது மைனர் மகளை நரபலி கொடுக்க முயன்ற பெற்றோரை போலீசார் கைது செய்தனர்.
மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் மாவட்டத்தில் உள்ள சாதனா கிராமத்தைச் சேர்ந்தவர் ஓன்கர் சோமா தாம்பரே. அவரது மனைவி மாலன்பாய். அவர்களின் மகள் நந்தினி(மைனர்). பந்து ஜகதாப்(45) மற்றும் நந்து சீதாராம் ஜாதவ்(40) ஆகியோர் சாமியார்கள். இதில் ஜாதவ் தாம்பரேவை அணுகி அவரது வீட்டில் புதையல் இருப்பதாகவும், அதை எடுக்க சில சடங்குகள் செய்ய வேண்டும் என்றும், அதற்கு தனக்கு ரூ.25 ஆயிரம் அளிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதற்கு தாம்பரே சம்மதிக்க ஜாதவ் தனக்கு தெரிந்த ஜகதாப் உள்ளிட்ட 4 பேரை அழைத்து வந்து தாம்பரேவின் வீட்டில் கடந்த மாதம் 19ம் தேதி முதல் சடங்கு, சம்பிரதாயங்களை செய்யத் துவங்கினார். தாம்பரேவின் வீட்டில் ரூ.8 கோடி புதையல் இருப்பதாக ஜாதவ் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது பெற்றோரும், 5 ஆண்களும் தனது வீட்டில் குழி தோண்டி அதில் ஒரு ஆமை, காளையின் பொம்மை ஆகியவற்றை போடுவதை நந்தினி பார்த்துவிட்டார். இதனால் கோபம் அடைந்த ஜகதாப் புதையலை பெற நந்தினியை நரபலி கொடுக்க அவரது பெற்றோரை சம்மதிக்க வைத்தார்.
சிறுமி அங்கிருந்து தப்பியோடி அக்கம்பக்கத்தினரிடம் தன்னை தனது பெற்றோரே நரபலி கொடுக்க முயல்வது பற்றி தெரிவித்துள்ளார். உடனே அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவல் கிடைத்தவுடன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நந்தினியின் பெற்றோர், அவரது மைனர் சகோதரர், ஜாதவ், ஜகதாப் ஆகிய 5 பேரை கைது செய்தனர். மேலும் தப்பியோடிய 3 பேரை தேடி வருகின்றனர்.
இந்த சம்பவம் பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.