ரஷ்யா எம்பி, தொழிலதிபர் மர்ம மரணம் .. ஒடிஷாவின் ராயகடாவை தேர்ந்தெடுக்க என்னதான் காரணம்?
ராயகடா: ரஷ்யாவின் அரசியல் புயல் இந்தியாவின் ஒடிஷா மாநிலத்தின் பழங்குடிகள் பிரதேசமான ராயகடாவை சூழ்ந்து நிற்பது சினிமாவை மிஞ்சும் காட்சிகள்தான். திரைப்படங்களில்தான் சர்வதேச கூலிப்படையினர் நாடு விட்டு நாடு போய் கண்டம் விட்டு கண்டம் போய் அரசியல் தலைவர்களை நூதனமான முறையில் குறிப்பாக இயற்கையாகவே மரணம் அடைந்த பாணியில் கொலை செய்வர். அதேபோன்ற சம்பவங்கள் ஒடிஷாவின் ராயகடாவில் நடந்திருப்பது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
ரஷ்யாவில் அதிபர் புதினனின் சர்வாதிகாரத்துக்கு எதிராக குரல் கொடுக்கும் தலைகள் மர்மமாக மரணம் அடைவது தொடர் கதை. ரஷ்யாவின் எதிர்க்கட்சித் தலைவர் விஷம் கொடுத்து தொடங்கியதில் இருந்து இப்போது புதின் எதிர்ப்பாளர்கள் அடுத்தடுத்து இந்தியாவில் மரணம் அடைந்திருப்பது வரை இது ஒரு தொடர் நிகழ்வு.
ஒடிஷாவின் ராயகடா மாவட்டம்.. மாவோயிஸ்டுகளின் பேராபத்து நிறைந்த பகுதியாக இருந்தது. இதற்கு காரணம் மலைகளும் மலைவாழ் ஆதி பழங்குடிகளும்தான். ஒடிஷா, ஆந்திரா, சத்தீஸ்கர் மாவட்ட எல்லைகளைக் கொண்ட கோரபுட், ராயகடாவை ஒட்டியது. ஒடிஷாவின் திராவிடர் மரபினப் பழங்குடிகள் பெருமளவு வாழக் கூடிய மலைகளைக் கொண்டது ராயகடா. மிக சிறுநகரமாக இருந்தாலும் இங்குள்ள ஹோட்டல்கள் வெளிநாட்டினரால் நிரம்பி வழிவதைப் பார்க்க முடியும்.

ராயகடா எனும் சிறுநகரம்தான் இப்போது ரஷ்யாவின் அரசியலில் கொலைப் புயலின் மையமாக இருக்கிறது. ரஷ்யா எம்பியும் புதினின் தீவிர எதிர்ப்பாளருமான பாவெல் ஆண்டோவும் அவரது 4 சகாக்களும் ராயகடா வருகை தந்தனர். இதில் பாவெலின் நண்பர் பிடநோவ் மாரடைப்பால் மரணமடைந்தார். எம்பி பாவெல், மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார் என்கின்றன போலீஸ் வட்டாரங்கள். இப்போது இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த மர்ம மரணங்களை ஒரு சாதாரண மரணங்களாகவே இந்தியாவுக்கான ரஷ்யா தூதரகம் அணுகுகிறது. ஆனால் எம்பி பாவெல், புதினை உக்ரைன் போர் விவகாரத்தில் மிக கடுமையாக விமர்சித்தவர். பாவெல், அவரது நண்பரின் மர்ம மரணங்கள் அப்படி எளிதாக கடந்து செல்லக் கூடியவையும் அல்ல என்கின்றனர் சீனியர் பத்திரிகையாளர்கள். அத்துடன் இதற்கு முன்னர் இந்தியாவில் அண்மைக்காலங்களில் நிகழ்ந்த வெளிநாட்டு பிரமுகர்களின் விவகாரங்களும் இப்போது தோண்டப்பட்டு வருகின்றன.. வெளிநாடுகளின் ஆட்சியாளர்களுக்கு எதிரானவர்களை படுகொலை செய்யக் கூடிய இடமாக கூலிப்படையினர் இந்தியாவையா தேர்ந்தெடுக்கின்றனர் என்கிற கேள்வியும் சீனியர் பத்திரிகையாளர்களால் எழுப்பப்படுகிறது.












Click it and Unblock the Notifications