ஒடிசாவில் பெங்களூர்-ஹவுரா எக்ஸ்பிரஸில் தடம் புரண்ட பெட்டிகள் இதுதான்! ஆள் அடையாளம் காண்பதில் சிக்கல்
புவனேஸ்வர்: ஒடிசாவில் தடம்புரண்ட கோரமண்டல் ரயில் மீது பெங்களூர்-ஹவுரா எக்ஸ்பிரஸ் மற்றும் ஒரு சரக்கு ரயில் அடுத்தடுத்து மோதின. இந்நிலையில் தான் பெங்களூர்-ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயிலில் தடம்புரண்ட பெட்டிகள் பற்றிய விபரம் வெளியாகி உள்ளது. அதோடு அதில் பயணித்தவர்களை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தின் தலைநகரான கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி இன்று கோரமண்டல் விரைவு ரயில் வந்து கொண்டிருந்தார். ஒடிசா மாநிலம் பாலாசூர் மாவட்டம் அருகே இன்று இரவு 7 மணிக்கு இந்த ரயில் தடம் புரண்டது. இந்த ரயில் தடம்புரண்ட இடம் வனப்பகுதியாகும்.
இதையடுத்து அந்த வழியாக வந்த பெங்களூர்-ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில் தடம்புரண்ட கோரமண்டல் விரைவு ரயில் பெட்டிகள் மீது மோதி விபத்தில் சிக்கியது. அதற்கு பிறகு சரக்கு ரயில் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானது. இப்படியாக அடுத்தடுத்து 3 ரயில்கள் விபத்தில் சிக்கின

இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விபத்தில் மொத்தம் 70 பேர் இறந்துள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் அதிகாரப்பூர்வமாக இன்னும் பலியானோரின் விபரங்களை வெளியாகவில்லை. மேலும் 350க்கும் அதிகமானவர்கள் காயம்டைந்துள்ளனர். காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் பலர் படுகாயமடைந்துள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இந்நிலையில் தான் பெங்களூர் சர் எம் விஸ்வேஸ்வரய்யா டெர்மினல் ரயில் நிலையத்தில் இருந்து ஹவுரா நோக்கி சென்ற எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த பயணிகள் மற்றும் தடம்புரண்ட பெட்டிகள் பற்றிய விபரம் வெளியாகி உள்ளது. அதாவது பெங்களூர் சர் எம் விஸ்வேஸ்வரய்யா டெர்மினல் ரயில் நிலையத்தில் இருந்து இந்த ரயிலில் மொத்தம் 994 பேர் முன்பதிவு டிக்கெட்டில் பயணம் செய்தனர். மேலுமு் 300 பேர் முன்பதிவில்லாத பெட்டியில் பயணத்தை தொடங்கி உள்ள தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் தற்போதைய விபத்தில் பெங்களூர் - ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயிலில் 2 முன்பதிவில்லாத பொது பெட்டிகளும், ஒரு பிரேக் வேன் பெட்டியும் தடம்புரண்டு இருக்கும் தகவல் கிடைத்துள்ளது. இதனால் ரயில் விபத்தில் காயமடைந்த மற்றும் பலியானவர்களின் பெயர், விபரங்களை அறிவதில் சிரமம் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
முன்னதாக கொல்கத்தா அருகே ஷாலிமாரில் இருந்து சென்னை புறப்பட்ட கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலில் என்ஜின் ஏ1, ஏ2 மற்றும் பி2 முதல் பி 9 வரையிலான 8 பெட்டிகள் தடம் புரண்டு இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications