நாடு எங்கே போகுது? பகலில் வங்கி அதிகாரி.. இரவில் கொள்ளையன்! பெங்களூர் போலீசிடம் சிக்கிய பலே நபர்கள்
பெங்களூர்: பகலில் டிப்-டாப் அதிகாரிகளாகவும், இரவில் வழிப்பறி கொள்ளைக்காரர்களாகவும் அவதாரம் எடுத்த 4 பேரை பெங்களூர் போலீசார் கைது செய்துள்ளனர்.
பெங்களூர் விவேக்நகர் போலீசார் ரோந்து சென்றபோது, ஸ்ரீநிவாகிலு பகுதி இன்னர்-ரிங் ரோடு பகுதியில் சிலர் சந்தேகத்திற்கிடமாக நிற்பதை பார்த்து விசாரித்தனர். அப்போது அவர்கள் வழிப்பறி கொள்ளையர்கள் என்பதும், ஆயுதங்களை காண்பித்து, சாலையில் நடந்து செல்வோரிடம் வழிப்பறி செய்ய பதுங்கியிருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்ய முற்பட்டபோது ஒரு நபர் தப்பியோடிவிட்டார். நான்குபேர் சிக்கினர். அவர்களிடமிருந்து மிளகாய் பொடி, அரிவாள் போன்ற கொள்ளைக்கு பயன்படுத்தும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட நபர்கள் எட்வின் பவுல் ராஜ் (21), கிளிண்டன் சேப்பல் (21), ஜோஷி பாஸ்கர் (21), தினேஷ் பென்சலையா (21), என தெரியவந்தது. இவர்கள் அனைவரும், விவேக்நகர், ஈஜிபுரா பகுதியை சேர்ந்தவர்கள்.
இதில் தினேஷ் பென்சலையா பெங்களூர், எம்.ஜி.ரோட்டிலுள்ள, பன்னாட்டு வங்கி ஒன்றில் பணியாற்றுகிறார். கிளிண்டன், எலக்ட்ரிஷியன் வேலை பார்ப்பவர். ஜோஷி பாஸ்கர், ஒரு பிரபல உணவக நிறுவனத்தில் அதிகாரியாக உள்ளவர். இவர்கள் அனைவரும் பகல் நேரத்தில், டிப்-டாப்பாக
உடை அணிந்து, ஷூ போட்டு பணிக்கு செல்வதும், இரவில், பொதுமக்களிடம் கொள்ளையடிப்பதும் வழக்கமாக கொண்டவர்கள் என தெரியவந்துள்ளது.
நிறைய பணம் சம்பாதித்து உல்லாச வாழ்க்கை வாழ வேண்டும் என்ற எண்ணமே இவர்களை இப்படி செய்ய தூண்டியுள்ளது. ஆனால் தற்போது உள்ள வேலையும் போய் சிறையில் கம்பி எண்ணுகிறார்கள்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், குற்றவாளிகளை பணிக்கு வைத்திருந்த நிறுவனங்கள், இவர்களின் பின்புலத்தை உறுதி செய்ததா என்பதை விசாரிப்போம். அதில் மெத்தனம் இருப்பது தெரியவந்தால் அந்த நிறுவனங்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்படும் என்று தெரிவித்தனர்.