பெங்களூரில் அரசு, உதவி பெறும் பள்ளிகள் இன்று இயங்கும்.. தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை!
பெங்களூர்: பெங்களூரில் அரசு, உதவி பெறும் பள்ளிகள் இன்று இயங்கும் எனவும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவிரி பிரச்சினைக்காக, பெங்களூரில் நேற்று கட்டுக்கடங்கா கலவரம் வெடித்த நிலையில், இன்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வன்முறை கட்டுக்குள் வந்துள்ளது. அதேநேரம், அறிவிக்கப்படாத பந்த் போல பெங்களூர் காட்சியளிக்கிறது. ஒருவேளை கடைகள் திறக்கப்பட்டால், பொது வாகனங்கள் இயக்கப்பட்டால் கலவரத்தின் உண்மை நிலை தெரியவரும்.

நிலைமை இப்படியிருக்கும்போதுகூட, இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை கிடையாது என பெங்களூர் நகர மாவட்ட கலெக்டர் ஷங்கர் தெரிவித்துள்ளார். நேற்று பக்ரீத்தை முன்னிட்டு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை. எனவே இன்று பள்ளிக்கு செல்ல வேண்டிய கட்டாயம் மாணாக்கர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து தனியார் பள்ளி கூட்டமைப்பு செயலாளர் சசிகுமார் கூறுகையில், பெங்களூரில் நேற்று முன்தினம் நடைபெற்ற கலவரத்தில் சிக்கி 2 மாணவர்கள் மாயமாகிவிட்டனர். கலவரம் ஆரம்பித்ததும், பள்ளிகள் விடுமுறையை அறிவித்தன. பாதியில் கிளம்பிய குழந்தைகளுக்கு பாதுகாப்பு வழங்க காவல்துறையை கேட்டுக்கொண்டோம். ஆனால், ஒரு கான்ஸ்டபிளை கூட பள்ளிக்கு அனுப்பவில்லை.
இப்படிப்பட்ட போலீசாரை வைத்துக்கொண்டு எப்படி நம்பி குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப முடியும். இன்று பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு ஏதாவது நடந்தால் அதற்கு, கர்நாடக அரசே பொறுப்பு என்றார். மேலும், தனியார் பள்ளிகள் நிலைமையை உணர்ந்து லீவோ, வகுப்போ வைத்துக்கொள்ளலாம் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications