ஆண்டுதோறும் 1 லட்சம் குழந்தைகள் காணாமல் போகின்றன - சாவகாசமாக சொல்லும் மத்திய அரசு!
டெல்லி: இந்தியாவில் ஆண்டுதோறும் ஒரு லட்சம் குழந்தைகள் காணாமல் போவதாக மத்திய உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
கடந்த ஆண்டு பிப்ரவரி 5ம் தேதி சுப்ரீம் கோர்ட்டில் ஒரு வழக்கை விசாரித்த பெஞ்ச், நாட்டில் 1.7 லட்சம் குழந்தைகள் காணாமல் போயுள்ளதை சுட்டிக் காட்டி தனது கோபத்தையும், ஆதங்கத்தையும் வெளிப்படுத்தியது. யாருமே இந்தக் குழந்தைகள் குறித்துக் கவலைப்படவில்லை, அக்கறை காட்டவில்லை. இது மிகக் கொடுமையாக, வேதனையாக இருக்கிறது என்றும் கவலை தெரிவித்திருந்தது.
மத்திய அரசு இந்த விஷயத்தில் அக்கறையில்லாமல், மெத்தனமாக இருப்பதாகவும் அது சாடியிருந்தது. அப்படி திட்டியும் கூட, இன்னும் காணாமல் போன அந்த குழந்தைகளில் 45 சதவீதம் பேர் இதுவரை மீட்கப்படவில்லை என்பது தான் அதிர்ச்சி தரும் உண்மை.
அறிக்கை...
கடந்தமாதம் இது தொடர்பாக உள்துறை அமைச்சகம் சார்பில் நாடாளுமன்றத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையில், கடந்த 2011ம் ஆண்டிலிருந்து 2014ம் ஆண்டு வரை சுமார் 3.25 லட்சம் குழந்தைகள் காணாமல் போயுள்ளதாகவும், ஆண்டுதோறும் சுமார் ஒரு லட்சம் குழந்தைகள் காணாமல் போவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
பாகிஸ்தானில்...
இது நமது அண்டை நாடான பாகிஸ்தானை ஒப்பிடுகையில் மிகவும் அதிகம் ஆகும். ஏனெனில், அங்கு ஆண்டுதோறும் வெறும் 3 ஆயிரம் குழந்தைகள் மட்டுமே காணாமல் போகிறார்களாம்.
சீனாவில்...
மக்கள்தொகையில் முதலிடத்தில் உள்ள சீனாவில் ஆண்டுதோறும் சுமார் பத்தாயிரம் குழந்தைகள் காணாமல் போவதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
8 நிடங்களுக்கு ஒரு குழந்தை...
தேசிய குற்றப்பதிவு ஆணைய தகவலின் படி, எட்டு நிமிடங்களுக்கு ஒரு இந்தியக் குழந்தை காணாமல் போகிறதாக தெரிய வந்துள்ளது.
சிறுமிகளின் நிலை...
இதில் வருந்தத்தக்க மற்றொரு விசயம் என்னவென்றால் காணாமல் போகும் குழந்தைகளில் 55 சதவீதம் பேர் பெண் குழந்தைகள். அவர்களில் 45 சதவீதம் பேர் கொலை செய்யப்படுகிறார்கள் அல்லது பாலியல் தொழில் அல்லது பிச்சையெடுக்க நிர்பந்திக்கப் படுகிறார்களாம்.
மோசமான நிலை...
குழந்தைகள் காணாமல் போவதில் மகாராஷ்டிரா தான் மோசமான நிலையில் உள்ளதாம். இங்கு மட்டும் கடந்த முன்றரை ஆண்டுகளில் சுமார் ஐம்பதாயிரத்திற்கும் அதிகமான குழந்தைகள் காணாமல் போயுள்ளார்களாம்.
25000 குழந்தைகள்...
டெல்லி மற்றும் ஆந்திரா இரண்டிலும் இந்தக் காலக்கட்டத்தில் 25 ஆயிரத்திற்கும் குறைவான குழந்தைகள் காணாமல் போயுள்ளதாக அந்த அறிக்கைத் தெரிவிக்கின்றது.
பெண் குழந்தைகள் அதிகம்...
மேற்கூறிய மாநிலங்களிலும் காணாமல் போனவர்களில் ஆண் குழந்தைகளை விட பெண் குழந்தைகள் தான் அதிகம். மகாராஷ்டிராவில் சிறுவர்களை விட பத்தாயிரம் சிறுமிகளை அதிகமாக காணவில்லை.
ஆந்திர நிலைமை...
ஆந்திராவில் 6,915 சிறுவர்களையும், அவர்களைப் போல் இரண்டு மடங்கு அதிகமாக அதாவது 11,625 சிறுமிகளையும் காணவில்லையாம். அதேபோல், மத்தியப்பிரதேசத்தில் 9ஆயிரம் சிறுவர்களும், 15 ஆயிரம் சிறுமிகளும் காணாமல் போயுள்ளார்களாம்.
ஏழ்மை காரணமாக...
இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், கிராமப்புறம் மற்றும் நகர்புறத்தில் வசிக்கும் குழந்தைகளில் பெரும்பாலானோர் ஏழ்மை மற்றும் பாலியல் துன்புறுத்தலால் வீட்டை விட்டு வெளியேறி விடுகின்றனர்.
கடத்தல்...
அவ்வாறு குடும்பத்தை விட்டு வெளியேறி தெருவில் அனாதரவாக நிற்கும் குழந்தைகளை கடத்தும் கும்பல் எளிதாக தவறான வழிகளில் தள்ளி விடுகின்றனர் எனத் தெரிவித்துள்ளனர்.