காவிரியின் குறுக்கே பல புதிய சிறு அணைகள்- 24 இடங்களில் ஆய்வு: கர்நாடகா அமைச்சர் பட்டீல்
பெங்களூர்: காவிரியின் குறுக்கே பல புதிய சிறு அணைகள் கட்டுவதற்காக 24 இடங்களில் ஆய்வு மேற்கொண்டுள்ளோம் என்று கர்நாடகா நீர்வளத்துறை அமைச்சர் எம்.பி. பட்டீல் கூறியுள்ளார்.
பெங்களூரில் நேற்று செய்தியாளர்களிடம் பட்டீல் கூறியதாவது:
காவிரி ஆற்றின் குறுக்கே மேக்கேதாட்டுவில் 2 புதிய அணைகளை கட்ட கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு திட்ட அறிக்கையை தயார் செய்ய உலக அளவிலான டெண்டர் கோரப்பட்டுள்ளது.
இதற்கு வருகிற டிசம்பர் 31-ந் தேதி கடைசி நாள் ஆகும். மேகதாதுவில் அணை கட்டுவதற்கு தமிழ்நாடு எதிர்த்தாலும் புதிய அணைகளை கட்டியே தீருவோம்.
புதிய அணைகள் கட்ட சட்ட ரீதியாக எந்த பிரச்சினையும் இல்லை. தமிழ்நாடு அரசு எதிர்ப்பு தெரிவிப்பது சரியல்ல. சட்ட வல்லுநர்களுடன் கலந்து ஆலோசனை நடத்திய பிறகே இந்த திட்டத்தை அமல்படுத்த கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது.
புதிய அணைகள் கட்டுவதால் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்துவிடுவதில் எந்த பிரச்சினையும் இருக்காது. காவிரி நடுவர் மன்ற தீர்ப்புக்கு உட்பட்டே புதிய அணைகள் கட்டப்படுகின்றன.
குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையிலே இந்த புதிய அணைகள் கட்டப்படுகின்றன. அதனால் இந்த திட்டத்தை அமல்படுத்தியே தீருவோம்.
மேக்கேதாட்டுவில் 45 டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட அணை கட்ட முடிவு செய்தோம். ஆனால் அங்கு வனப்பகுதிகள் அதிக அளவில் உள்ளதால், வனப்பகுதி நீரில் மூழ்கும். இதனால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும்.
இதனால் 45 டி.எம்.சி.க்கு குறைவான கொள்ளளவில் அணை கட்டப்படும். அணையின் அளவு குறைக்கப்பட்டுள்ளதால் காவிரி ஆற்றில் வேறு இடங்களில் சிறிய அணை கட்டவும் முடிவு செய்துள்ளோம். இதற்காக 24 இடங்களை தேர்வு செய்து வைத்துள்ளோம்.
இவ்வாறு கர்நாடகா அமைச்சர் பட்டீல் தெரிவித்துள்ளார்.