கிஸ் ஆப் லவ்வுக்கும் ஆன்லைன் விபச்சாரத்திற்கும் தொடர்பா?: விசாரிக்கும் கேரள அரசு
திருவனந்தபுரம்: கிஸ் ஆப் லவ் போராட்டத்திற்கும் ஆன்லைன் விபச்சாரத்திற்கும் தொடர்பு உள்ளதா என்று விசாரணை நடத்தப்படும் என கேரள மாநில உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதலா தெரிவித்துள்ளார்.
ஆன்லைனில் விபச்சாரம் நடத்திய வழக்கில் கிஸ் ஆப் லவ் போராட்ட தலைவர் ராகுல் பசுபாலன், அவரது மனைவியும், மாடலுமான ரஷ்மி நாயர், பிரபல ரவுடி அக்பர் உள்பட 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இது குறித்து கேரள மாநில உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதலா செய்தியாளர்களிடம் கூறுகையில்,
ஆன்லைன் விபச்சார வர்த்தகத்தில் பெரிய கும்பலே கேரளாவில் உள்ளது. இது குறித்து விசாரணை நடத்தி குற்றவாளிகள் சட்டத்திற்கு முன்பு நிறுத்தப்படுவார்கள். கிஸ் ஆப் லவ் போராட்டத்தை முன் நின்று நடத்தியவர்களில் பலர் ஆன்லைன் விபச்சார வழக்கில் சிக்கியுள்ளனர்.
அவர்கள் தங்கள் சொந்த விஷயத்திற்காக எதையும் செய்வார்கள் என்று தெரிய வந்துள்ளது. சட்டவிரோத செயல்களை மறைக்கத் தான் கிஸ் ஆப் லவ் போராட்டம் நடத்தப்பட்டதா என்று விசாரணை நடத்தப்படும் என்றார்.