பத்து வருடங்களில் பூரண மதுவிலக்கை எட்டும் கேரளா – உம்மன் சாண்டி நம்பிக்கை!
திருவனந்தபுரம்: கேரளாவில் இன்னும் பத்து வருடங்களில் கேரளாவில் பூரண மது விலைக்கை எட்டும். இதற்கு அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைப்புத் தர வேண்டும் என்று கேரள முதல்வர் உம்மன் சாண்டி கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள ஒரு வீடியோ உரையில், இந்த நிதியாண்டில் மூடப்பட்ட 418 பார்கள் மீண்டும் திறக்கப்படமாட்டாது. மேலும், மீதமுள்ள 312 பார்களும் கூடிய விரைவில் மூடப்படுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.
சட்ட கொள்கைகளின் படி இந்த நிதி ஆண்டிற்கான லைசென்ஸ் வழங்கப்பட்டுவிட்டதால், இந்த 312 பார்களும் படிப்படியாக மூடப்படும்.
இன்று முதலாக மதுவிலக்கு அமலில் உள்ள நாட்களில், விடுமுறை நாளான ஞாயிற்றுக் கிழமையும் இணைகின்றது. அடுத்த 2015-16 நிதியாண்டின்போது ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் மட்டுமே மது கிடைக்கும்.
10 வருடங்களில் கேரளா மதுவில்லா மாநிலமாக மாறிவிடும் என்றும் தெரிவித்துள்ளார். இதனால் பாதிப்படையும் தொழிலாளர்களுக்கு, அவர்கள் நசிவடையாமல் இருக்கவும், சுயதொழில் மேற்கொள்ளவும் கடனுதவிகள் வழங்கப்படும்.
அரசின் இந்த முடிவுக்கு அனைவரும் ஒத்துழைப்புத் தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார் சாண்டி.