ஆபரேஷன் 2019: பிரணாப் முகர்ஜியை அடுத்த பிரதமராக்க முயலும் ஆர்எஸ்எஸ்.. சிவ சேனா கிளப்பிய புயல்
பிரணாப் முகர்ஜியை வரும் நாடாளுமன்ற தேர்தலில் பிரதமராக முன்னிறுத்த பாஜக- ஆர்எஸ்எஸ் திட்டமிட்டு இருப்பதாக சிவ சேனா புதிய அரசியல் புயலை கிளப்பி உள்ளது.
டெல்லி: பிரணாப் முகர்ஜியை வரும் நாடாளுமன்ற தேர்தலில் பிரதமராக முன்னிறுத்த பாஜக- ஆர்எஸ்எஸ் திட்டமிட்டு இருப்பதாக சிவ சேனா கட்சி புதிய அரசியல் புயலை கிளப்பி உள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் தற்போது ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் ஆண்டு விழா இரண்டு நாட்கள் முன்பு நடந்தது. இதற்கு சிறப்பு விருந்தினராக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் குடியரசுத்தலைவருமான பிரணாப் முகர்ஜி சென்றிருந்தார்.
நாக்பூரில் ஆர்எஸ்எஸ் நிறுவனர் கே.பி.ஹெட்கேவார் பிறந்த இடத்தில் மரியாதை செலுத்தினார். பிரணாப்பிற்கு ஆர்எஸ்எஸ் அழைப்பு விடுக்கப்பட்ட போதே காங்கிரஸ் தலைவர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர்.

எதிர்ப்பு
ஆர்எஸ்எஸ் இயக்கம் பல திட்டங்களை வைத்து அவருக்கு அழைப்பு விடுத்து இருந்ததாக கூறப்பட்டது. ஆனால் என்ன மாதிரியான திட்டங்கள் என்று கூறப்படவில்லை. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சிதம்பரம், பிரணாப்பின் மகள், ஜெய்ராம் ரமேஷ், ஜாபர் ஷெரீப் ஆகியோர் கண்டனம் தெரிவித்தனர்.

திட்டம் என்ன
பிரணாப் முகர்ஜி அந்த கூட்டத்திற்கு சென்றதும், அங்கு ஆர்எஸ்எஸ் இயக்கத்திற்கு ஆதரவாக பேசியதும் இந்திய அரசியலிலேயே பெரிய விஷயமாக பார்க்கப்பட்டது. இந்த நிலையில் 2019 லோக் சபா தேர்தலில் பிரதமராக பாஜக கூட்டணி சார்பில் பிரணாப் முகர்ஜி நிறுத்தப்படலாம் என்று கூறப்படுகிறது. பாஜக கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில் அப்படி நடக்க வாய்ப்புள்ளது.

சிவ சேனா என்ன சொல்கிறது
இதுகுறித்து சிவ சேனா கருத்து தெரிவித்துள்ளது. அதன்படி, பாஜக வரும் நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் வேட்பாளராக மோடியைதான் நிறுத்தும். ஆனால் பாஜகவிற்கு பெரும்பான்மை கிடைக்க வாய்ப்பில்லை. கூட்டணி கட்சிகள் மோடியை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இதனால், பாஜக சார்பில் பிரணாப் முகர்ஜி முன்னிறுத்தப்பட வாய்ப்புள்ளது. ஆர்எஸ்எஸ் இதை மனதில் வைத்துதான் இயங்குகிறது என்றுள்ளார்.

என்ன நடக்கும்
ஏற்கனவே காங்கிரசில் இருந்த போது பிரணாப்பிற்கு பிரதமர் வாய்ப்பு வந்தது. ஆனால் கடைசியில் மன்மோகன் சிங் பிரதமரானார். இதனால் பிரணாப் கொஞ்சம் மன வருத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இதை தற்போது பாஜக பயன்படுத்திக் கொள்வதாக கூறப்படுகிறது. இந்த ஒரு விழா காரணமாக தேசிய அரசியலில் பல மாற்றங்கள் நடக்க உள்ளது.












Click it and Unblock the Notifications