பாக்., முகத்திரையை கிழிக்கும் குழு.. யூசுப் பதான் வெளிநாடு செல்ல மம்தா எதிர்ப்பு.. திடீர் அறிவிப்பு
கொல்கத்தா: ‛ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை குறித்து பாகிஸ்தான் பொய்களை பரப்பி வருகிறது. இந்த பொய்களை முறியடிக்கும் வகையில் மத்திய அரசு 7 எம்பிக்கள் தலைமையில் அனைத்து கட்சி குழுவை அமைத்துள்ளது. இந்த குழுவில் முன்னாள் கிரிக்கெட் வீரரும், மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்பியுமான யூசுப் பதான் இடம்பெற்றுள்ளார். இந்நிலையில் தான் யூசுப் பதான் அந்த குழுவுடன் சேர்ந்து செயல்படமாட்டார். வெளிநாடுகளுக்கு செல்ல மாட்டார் என்று திரிணாமுல் காங்கிரஸ் பரபரப்பாக அறிவித்துள்ளது.
ஜம்மு காஷ்மீரின் பஹல்கமில் கடந்த மாதம் 22ம் தேதி பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத அமைப்பான ‛தி ரெசிஸ்டண்ட் ஃப்ரண்ட்' என்ற அமைப்பை சேர்ந்த பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 26 சுற்றுலா பயணிகள் பலியாகினர். இதற்கு நம் நாடு ‛ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பதிலடி கொடுத்தது.

பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாதிகளின் முகாம்கள் அளிக்கப்பட்டன. பதிலுக்கு நம்மை தாக்க முயன்ற பாகிஸ்தானின் முயற்சிகள் முறியடிக்கப்பட்டதோடு நம் நாடு நடத்திய தாக்குதலில் பாகிஸ்தானின் விமானப்படை தளங்கள் அழிக்கப்பட்டன. அதன்பிறகு பாகிஸ்தான் கெஞ்சியதால் சண்டையை நிறுத்துவதாக நம் நாடு அறிவித்தது.
இப்படி நம் அதிரடி தாக்குதலை சமாளிக்க முடியாமல் மண்டியிட்டு சரணடைந்த பாகிஸ்தான் இப்போது பொய் பிரசாரங்களை கூறி வருகிறது. நம் நாடு அப்பாவிகள் மற்றும் மசூதிகளை குறிவைத்து தாக்கியதாக அப்பட்டமான பொய்களை பரப்பி வருகிறது. அதேபோல் நம் விமானப்படை தளம், வான்வெளி பாதுகாப்பு அமைப்புகளை அழித்ததாகவும் தம்பட்டம் அடித்து வருகிறது. பாகிஸ்தானின் இந்த பொய்களை முறியடிக்கும் வகையில் வெளிநாடுகளுக்கு சென்று அந்த நாட்டின் தலைவர்களுக்கு ‛ஆபரேஷன் சிந்தூர்' பற்றி விளக்கம் அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதற்காக 7 எம்பிக்கள் தலைமையில் அனைத்து கட்சி குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுக்களுக்கு காங்கிரஸின் சசிதரூர், திமுகவின் கனிமொழி, பாஜகவின் ரவி சங்கர் பிரசாத் எம்பி, பைஜெயந்த் பாண்டா, நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் எம்பியான சஞ்சய் குமார் ஷா, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சுப்ரியா சுலே, சிவசேனாவின் ஸ்ரீகண்ட் ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்டவர்கள் குழுக்களை வழிநடத்த உள்ளனர். இதில் ஒவ்வொரு குழுக்களிலும் 5 முதல் 6 எம்பிக்கள் வரை இடம்பெற்றுள்ளதோடு, தூதர்களும் இடம்பெற்றுள்ளன. இந்த குழு வரும் 22ம் தேதிக்கு பிறகு வெளிநாடுகளுக்கு செல்ல உள்ளனர்.
இந்த குழுவில் முன்னாள் கிரிக்கெட் வீரரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் லோக்சபா எம்பியுமான யூசுப் பதானுக்கு இடம் அளிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் எம்பியான சஞ்சய் குமார் ஷா தலைமையிலான குழுவில் யூசுப் பதான் இடம்பெற்றிருந்தார். இந்த குழுவினர் இந்தோனேஷியா, மலேசியா, தென்கொரியா, ஜப்பான், சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கு செல்ல உள்ளனர். இந்நிலையில் தான் யூசுப் பதான் அந்த குழுவுடன் சேர்ந்து செயல்படமாட்டார் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
அதாவது அனைத்து கட்சி குழுவில் இடம்பெறும் எம்பிக்கள் குறித்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியிடம் மத்திய அரசு எந்த ஆலோசனையும் செய்யவில்லை. சுயமாக செயல்பட்டு யூசுப் பதானை அந்த குழுவில் சேர்த்துள்ளனர். இதனால் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் யூசுப் பதான் உள்பட யாரும் அனைத்து கட்சி எம்பிக்கள் குழுவுடன் சேர்ந்து செயல்படமாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக காங்கிரஸ் சார்பில் அனைத்து கட்சி குழுவில் இடம்பெற சில எம்பிக்களின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டது. ஆனால் அதனை மத்திய அரசு ஏற்காமல் காங்கிரஸ் பரிந்துரை செய்யாத சசிதரூர் எம்பியை ஒரு குழுவின் தலைவராக மத்திய அரசு நியமித்தது. இதனை காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சனம் செய்த நிலையில் இப்போது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியோ யூசுப் பதான் அனைத்து கட்சி எம்பிக்களுடன் சேர்ந்து செயல்படமாட்டார் என்று அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications