ரூபாய் நோட்டு பிரச்சினை.. பாஜகவுக்கு எதிராக காங். தலைமையில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகள்! அவசர ஆலோசனை
டெல்லி: பெரிய அளவிலான ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட விவகாரத்தால் நாடு முழுவதும் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வரும் நிலையில், நாளை மறுநாள் தொடங்கும் நாடாளுமன்ற குளிர்க்கால கூட்டத்தொடரில் இதை கிளப்ப எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன.
அன்றாட தேவைகளுக்கு பணம் இல்லாமல் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். சிறு வியாபாரிகள், நடுத்தர வர்க்கத்தினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
மத்திய அரசின் இந்த தடாலடி முடிவுக்கு காங்கிரஸ், ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், தெலங்கானா ராஷ்டிரிய சமீதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில், நாடாளுமன்ற குளிர்க்கால கூட்டத் தொடர் நாளை மறுநாள் தொடங்கி டிசம்பர் 16ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த கூட்டத் தொடரில் 6 புதிய மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதில் ஜிஎஸ்டி தொடர்பான 3 புதிய திருத்த மசோதாக்களும் உள்ளன.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் ரூபாய் நோட்டுகள் வாபஸ் விவகாரத்தை எழுப்ப காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. இதன் ஒருபகுதியாக காங்கிரஸ், திரினாமுல் காங்கிரஸ், ஐக்கிய ஜனதாதளம், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சி தலைவர்கள் இன்று டெல்லியில் அவசர ஆலோசனை நடத்தினர்.
குலாம் நபி ஆசாத், ஆனந்த் ஷர்மா, சீத்தாராயம் யெச்சூரி, டி.ராஜா, டெரிக் ஓ.பிரைன் உள்ளிட்ட அக்கட்சியின் முக்கிய தலைவர்கள் இதில் பங்கேற்றனர்.
இந்த கூட்டம் நாடாளுமன்றத்தில் நடைபெற்றது. திரினாமுல் காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சிகள் மேற்கு வங்கத்தில் மோதல் போக்கை கடைபிடித்து வரும் நிலையில், ரூபாய் பிரச்சினையில் இவை ஒன்றிணைந்து ஆலோசனையில் பங்கேற்றுள்ளது. காங்கிரசின் முன்முயற்சி இதற்கு காரணம் என கூறப்புடகிறது.