மோடியை பார்த்ததும் நேர்லயே நாலு கேள்வி கேட்டிருக்க வேண்டாமா? சொதப்பிய எதிர்க்கட்சிகள்
டெல்லி: பிரதமர் மோடி இந்த குளிர்கால கூட்டத்தொடரில் முதல் முறையாக லோக்சபா வந்த நிலையில் திடீரென ரூபாய் நோட்டு விவகாரத்தை கைவிட்ட எதிர்க்கட்சிகள், ராணுவ வீரர்கள் விவகாரத்தை கையில் எடுத்து அமளியில் ஈடுபட்டதால் காலை முதல் மதியம்வரை லோக்சபா அலுவல் தடைபட்டது.
லோக்சபா இன்று கூடியதும், பிரதமர் மோடி அவைக்கு வருகை தந்தார். இத்தனை நாட்களாக மோடி வந்து ரூபாய் நோட்டு அறிவிப்பு பற்றி விளக்கம் அளிக்க வேண்டும் என்று கோஷமிட்டு குளிர்கால கூட்டத்தொடரை ஸ்தம்பிக்க வைத்த எதிர்க்கட்சிகள், திடீரென இன்று தங்கள் கோஷத்தை மாற்றிவிட்டனர்.
காஷ்மீரில் நேற்று தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட ராணுவ வீரர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என கூறி அவர்கள் அமளியில் ஈடுபட்டனர்.
சபாநாயகர் மறுப்பு
ஆனால், இரங்கல் தீர்மானத்திற்கு லோக்சபா சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அனுமதி தர மறுப்பு தெரிவித்தார். இதனால் அமளி தொடர்ந்தது. காஷ்மீரில் ராணுவ தேடுதல் வேட்டை முடிவடையாத நிலையில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்ற முடியாது. உரிய அறிக்கை இன்னும் கைக்கு வரவில்லை என சபாநாயகர் கூறியதை ஏற்க எதிர்க்கட்சிகள் தயாராக இல்லை.
ராணுவ வீரர்களுக்கு அவமதிப்பு
இதனால் அவை அலுவல் முழுக்க பாதிக்கப்பட்டது. காங்கிரஸ் இப்பிரச்சினைக்காக வெளிநடப்பு செய்தது. ராகுல் காந்தி கூறுகையில், ராணுவ வீரர்களை அரசு அவமதித்து விட்டது. எனவேதான், இரங்கல் தீர்மானம் நிறைவேற்ற மறுக்கிறது என்று கூறினார்.
அரசியல் செய்கிறார்கள்
ராணுவ வீரர்கள் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்க அரசு தயாராக இருப்பதாகவும், முழு அறிக்கை வரட்டும் என்றுதான் சபாநாயகர் கூறினார் எனவும், இதிலும் எதிர்க்கட்சிகள் அரசியல் செய்வது வேதனையாக உள்ளது என்றும், மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார்.
ஏமாற்றம்
ரூபாய் நோட்டு விவகாரம் குறித்து இன்று ஆக்கப்பூர்வ விவாதம் நடைபெறும் என எதிர்பார்த்த பொதுமக்களும், நாடாளுமன்ற லாபியில் குவிந்திருந்த பத்திரிகையாளர்களும் ஏமாற்றத்தோடு திரும்பிச் செல்ல வேண்டியதாயிற்று.