மக்களுடன் தொடர்பே இல்லை, பிறகு எப்படிங்க ஜெயிக்க முடியும்... பவார் மகள்
மும்பை: லோக்சபா தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு மக்களுடன் தொடர்பே இல்லாமல் போன காரணத்தால்தான் தோல்வியைச் சந்திக்க நேரிட்டதாக அக்கட்சித் தலைவர் சரத் பவாரின் மகள் சுப்ரியா சுலே கூறியுள்ளார்.
சுப்ரியா, பாராமதி தொகுதியிலிருந்து வெற்றி பெற்றுள்ளார். ஆனால அவரது கட்சி தேர்தலில் படு தோல்வியைச் சந்தித்தது.
இதுகுறித்து அவர் கூறுகையில், மக்களுடன் தொடர்பு இல்லாமல் போனதே தோல்விக்கு முக்கியக் காரணம். மக்களிடமிருந்து எங்களுக்கு நிறைய புகார்கள் வருகின்றன. அவர்களின் கருத்துக்கள், எண்ணங்கள் வந்த வண்ணம் உள்ளன.
கடந்த முறை நான் 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயித்தேன். இந்த முறை 70,000 வாக்குகள் வித்தியாசம்தான் வந்துள்ளது.
எல்லாமே சரியில்லை. நாம் யோசித்துப் பார்க்க வேண்டும். மக்களை சென்றடைவது எப்படி என்பதை யோசிக்க வேண்டும் என்றார் அவர்.
தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு மகாராஷ்டிராவில் 4 இடங்களில் மட்டுமே வெற்றி கிடைத்தது. காங்கிரஸ் கட்சிக்கோ 2 இடங்கள்தான் கிடைத்தன. சிவசேனா பாஜக கூட்டணி இங்கு 42 இடங்களை வென்றது. மொத்தம் 48 இடங்கள் உள்ளன.
வரும் அக்டோபர் மாதம் மகாராஷ்டிராவில் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இப்போது கிடைத்துள்ள தோல்வியால் காங்கிரஸும், தேசியவாத காங்கிரஸும் கடும் கவலையில் மூழ்கியுள்ளன.