தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் மறைமுக உதவி: ராஜ்நாத் சிங் குற்றச்சாட்டு
டெல்லி: ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்குள் தீவிரவாதிகளை ஊடுருவச் செய்ய பாகிஸ்தான் மறைமுகமாக உதவுவதாக உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் குற்றம் சாட்டியுள்ளார்.
ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் தொடர்ச்சியாக தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்தியா கடுமையான பதிலடி கொடுத்ததால் வெள்ளைக் கொடி காண்பித்து பின்வாங்கியது பாகிஸ்தான்.
ஆனாலும் இந்திய நிலைகளை இலக்கு வைத்து தொடர்ச்சியாக பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், எல்லையில் தீவிரவாதிகள் ஊடுருவல் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் எவ்வித தடையுமின்றி ஜம்மு-காஷ்மீருக்குள் ஊடுருவ பாகிஸ்தான் ராணுவம் மறைமுக உதவுகிறது. எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்துவது திசை திருப்பும் முயற்சியே என்றார்.
முன்னதாக நேற்று செய்தியாளர்களிடம் பேசிய ராஜ்நாத், எல்லையில் அத்துமீறுவதை பாகிஸ்தான் நிறுத்திக்கொள்ள வேண்டும் என எச்சரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.