ரம்ஜான் பெருநாள்... "இறைச்சி" உரிமைக்காக இன்னமும் போராடும் குஜராத்தின் 'பாலிதானா' முஸ்லிம்கள்
பாலிதானா: முஸ்லிம்கள் உற்சாகத்துடன் கொண்டாடும் பண்டிகை ரம்ஜான் பெருநாள்... ஆனால் குஜராத் மாநிலத்தின் பாலிதானா முஸ்லிம்களுக்கோ பண்டிகைகள் ஒரு போராட்டம்தான்..
குஜராத்தின் பாவ்நகர் மாவட்டத்தில் ஜைன மதத்தினரின் புனித தலமாக திகழ்கிறது பாலிதானா. இங்கு ஜைன மதத்தைச் சேர்ந்த ஆண், பெண்கள் துறவு வாழ்க்கையை வாழ்கின்றனர்.
இந்த துறவு வாழ்க்கை என்பது முந்தைய காலத்தில் பின்பற்றப்பட்ட வாழ்வியலை அடிப்படையாகக் கொண்டது. இத்துறவிகள் தங்குமிடத்தில் உணவு சமைக்கப்படுவதில்லை. பொது இடத்தில் சமைக்கப்படும் உணவை தேடிப் போய் வாங்க வேண்டும்.
அந்த உணவும் கூட துறவு வாழ்க்கைக்கு உகந்ததாக சமைக்கப்பட்டிருக்கும். தலைமுடியை தாங்களாகவே கைகளில் அகற்றிக் கொள்கிற வகையிலான வழக்கத்தையும் ஜைன துறவிகள் பின்பற்றுகின்றனர். செல்வ செழிப்புமிக்க, நன்கு கல்வி கற்ற இளம்பெண்கள் கூட துறவிகளாக இந்த மடங்களில் வந்து தஞ்சமடைகின்றனர்.
அத்துடன் பாலிதானாவில் 3000 படிக்கட்டுகளைக் கடந்த உச்சிமலையில் பல்லாயிரக்கணக்கான கோவில்கள் அமைக்கப்பட்டுள்ளன. பல நூற்றாண்டுகளாக தொடர்ந்து இங்கு கோவில்கள் கட்டப்பட்டு கொண்டே வருகின்றன... இத்தனை படிகளைக் கடந்து உச்சிமலையில் இத்தனை ஆயிரம் கோயில்கள் என்பது நம்மை மலைக்க வைக்கவே செய்யும்.
இந்த 3000 படிக்கட்டுகளை நாள்தோறும் காலை, மாலையில் ஜைன துறவிகள் சர்வ சாதாரணமாக ஏறி இறங்கி வருவது ஆச்சரியமடைய வைக்கிறது. இதில் மற்றொரு ஆச்சரியம், ஜைனர்களின் வழிபாட்டு தலங்களுக்கு செல்லும் மலையில் நடுவே ஒரு தர்கா உள்ளது.
இங்கு முஸ்லிம்கள் மட்டுமின்றி, ஜைனர்களும் வழிபாடு நடத்துகின்றனர். அலாவுதீன் கில்ஜி காலத்தில் ஜைன கோவில்களை கொள்ளையடிக்க நடந்த முயற்சியை இந்த தர்காவில் இருந்த துறவி ஒருவர் தடுத்து நிறுத்தினார் என்பது செவிவழி கதை. அதனால் அனைத்து மதத்தினரும் வழிபாடு நடத்துகின்றனர்.
ஜைனர்கள் வாழும் பாலிதானாவில் சுமார் 17,000 முஸ்லிம்களும் வசிக்கின்றனர். பாலிதானாவில் துறவிகளாக இருக்கும் ஜைனர்கள், வழக்கத்துக்கு மாறாக சில ஆண்டுகளுக்கு முன்னர் போராட்டம் ஒன்றை நடத்தினர். பாலிதானா நகரை முழுவதும் சைவ நகரமாக அறிவிக்க வேண்டும்; இறைச்சிக்குத் தடை விதிக்க வேண்டும் என்று... இந்த கோரிக்கை முழுமையாக ஏற்றுக் கொள்ளப்படாத போதும் குறிப்பிட்ட இடங்களில் தடை விதிக்கப்பட்டது.
ஆனாலும் பொதுவாக பாலிதானாவில் அசைவத்துக்கு தடைதான்... இதற்கு பாலிதானா வாழ் முஸ்லிம்கள் மட்டுமின்றி பிற மாநிலத்தவரும் கூட கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
பாலிதானாவில் வாழ்கிற ஜைனர் அல்லாதவர்கள் அசைவ உணவுக்காக பல மைல் தூரம் செல்ல வேண்டிய நிலை இருப்பதால் அவ்வப்போது போராட்டங்களும் தொடர் கதையாகத்தான் இருந்து வருகிறது...
இன்றைய ரம்ஜான் நாளிலும் கூட!