சரித்திரம் படைத்தது விட்டல் ருக்மணி கோயில்! முதல் பெண் அர்ச்சகர் பூஜைகளை நடத்தினார்!!
மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் விட்டல் ருக்மணி கோயிலில் மரபுகளை உடைத்து உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் அர்ச்சகராக நியமிக்கப்பட்ட ஊர்மிளா பதே என்ற பெண் பூஜைகளை நடத்தியுள்ளார்.
மகாராஷ்டிராவில் பாந்தர்பூரில் அமைந்துள்ளது விட்டல் ருக்மணி கோயில். இந்த கோயிலுக்கு ஆண்டு தோறும் 2 கோடி பக்தர்களுக்கு மேல் வந்து போகின்றனர். இக்கோவில் வர்காரி இனத்தவரின் குலதெய்வமாக விளங்குகின்றது.
இந்த கோவிலில் அன்றாட பூஜைகள் செய்ய பெண் அர்ச்சர்கர்கள் மற்றும் பிரமாணர் அல்லாத இதர பிரிவினரையும் அனுமதிக்கலாம் என்று உச்சநீதிமன்றம் இந்த ஆண்டு ஜனவரி 15ல் தீர்ப்பு வழங்கியது.
இதையடுத்து கோவிலின் அர்ச்சர்கர் பணிக்கு பிரமாணர் அல்லாத ஆண்கள், பெண்கள் என 129 பேர் விண்ணப்பித்தனர். இவர்களில் 16 அர்ச்சர்கர்களை கோவில் நிர்வாகம் தேர்வு செய்தது. இந்த 16 பேரில் இருவர் பெண்கள்.
இவர்களில் ஊர்மிளா பதே என்ற பெண் நேற்று பூஜைகளை நடத்தினார். விட்டல் ருக்மணி கோயிலில் உள்ள அம்மனுக்கு அவர் பூஜைகளை செய்தார். இது குறித்து விட்டல் ருக்மணி கோயில் நிர்வாகத்தின் இயக்குனர் சஞ்சய் தெலி கூறுகையில், கோயிலில் பின்பற்றப்படும் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு எங்ளுடைய பணியை நாங்கள் மேற்கொள்வோம். சமூகத்தின் அனைத்து தரப்பிலிருந்தும் எங்களுக்காக ஒத்துழைப்பு அளித்தவர்களுக்கு நன்றி என்றார்.
900 ஆண்டுகால மரபை உடைத்து பெண் ஒருவர் அர்ச்சகராக பூஜைகளை நடத்தியிருப்பதற்கு சமூக நீதியில் அக்கறை கொண்டோர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்