பயந்து வீட்டிலேயே இருந்தால்.. இனி சம்பளம் கிடையாது.. பண்டிட்டுகளுக்கு காஷ்மீர் ஆளுநர் எச்சரிக்கை
ஸ்ரீநகர்: தீவிரவாத தாக்குதலுக்கு பயந்து வேலைக்கு செல்லவில்லை என்றால் இனி சம்பளம் வழங்கப்பட மாட்டாது என பண்டிட் சமூகத்தினருக்கு ஜம்மு - காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா எச்சரிக்கை விடுத்தார்.
பண்டிட் சமூகத்தினரை குறிவைத்து காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்துவது அதிகரித்து வருவதை அடுத்து, அவர்கள் வேலைக்கு செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
6 மாதங்களாக வேலைக்கு செல்லாதபோதிலும், அவர்களுக்கு மாத சம்பளம் வழங்கப்பட்டு வந்த சூழலில் காஷ்மீர் ஆளுநர் தற்போது இவ்வாறு கூறியுள்ளார்.
தாலிபன்களை விடுவிக்க கோரி தீவிரவாத தாக்குதல்.. பாகிஸ்தானில் ராணுவ வீரர்கள் படுகொலை! உச்சகட்ட பதற்றம்
அகதிகளாக வெளியேறிய பண்டிட்டுகள்
காஷ்மீரில் 1990-களில் காஷ்மீர் பண்டிட் சமூகத்தினர் மீது பயங்கர வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது. தீவிரவாதிகளின் இந்த வெறியாட்டத்தில் அந்த சமூகத்தை சேர்ந்த குழந்தைகள், பெண்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் பரிதாபமாக உயிரிழந்தனர். பின்னர், இந்த வன்முறைக்கு பயந்து காஷ்மீரில் இருந்து பெரும்பாலான பண்டிட்டுகள் வெளியேறி, பல மாநிலங்களில் அகதிகளாக தஞ்சம் புகுந்தனர். கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக அவர்கள் காஷ்மீர் திரும்பவில்லை.
தீவிரவாதிகள் மீண்டும் அட்டூழியம்
இதனிடையே, கடந்த 2014-ம் ஆண்டு பாஜக ஆட்சி அமைந்தது முதலாக, காஷ்மீரில் பண்டிட்டுகளை மீள் குடியேற்றம் செய்வது குறித்து பேசப்பட்டது. கடந்த காலங்களை போல காஷ்மீரில் தீவிரவாதிகளின் கொட்டம் இல்லாததால், பண்டிட்டுகளும் காஷ்மீர் திரும்பி வந்தனர். அவர்களுக்கு அரசுப் பணிகளும் வழங்கப்பட்டன. இந்த சூழலில், கடந்த 2021-ம் ஆண்டு முதல் காஷ்மீர் பண்டிட்டுகளை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த ஆரம்பித்தனர். காஷ்மீர் பண்டிட்டுகள் மட்டுமல்லாமல் வெளிமாநிலத்தவர்கள், காவல்துறையில் பணிபுரியும் முஸ்லிம்கள் ஆகியோர் மீதும் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதில் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக, காஷ்மீர் பண்டிட்டுகள் அதிக அளவில் உயிரிழந்துள்ளனர்.
பண்டிட்டுகள் போராட்டம்
தங்களை குறிவைத்து தீவிரவாதிகள் கொலைவெறி தாக்குதல் நடத்துவதால், வேலைக்கு செல்ல பயந்து காஷ்மீர் பண்டிட்டுகள் கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக வீட்டிலேயே முடங்கிக் கிடக்கின்றனர். மேலும், தங்களை காஷ்மீரில் இருந்து ஜம்முவுக்கு பணியிட மாற்றம் செய்யக் கோரி தொடர்ந்து போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். காஷ்மீர் பண்டிட்டுகளின் இந்தப் போராட்டத்தால் அரசுப் பணிகள் முற்றிலுமாக முடங்கி இருப்பதாக கூறப்படுகிறது.
ஆளுநர் கடும் எச்சரிக்கை
இந்நிலையில், ஜம்மு - காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா நேற்று ஒரு அறிக்கையை வெளியிட்டார். அதில், "காஷ்மீர் பண்டிட்டுகளின் பாதுகாப்புக்காகவே அவர்கள் மாவட்ட தலைநகரங்களில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். மேலும், பண்டிட்டுகளின் குறைகளை தீர்த்து வைக்க தனி அதிகாரிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, ஜம்முவுக்கு அவர்களை பணியிட மாற்றம் செய்ய முடியாது. தீவிரவாதிகளை ஒடுக்கும் பணியில் போலீஸாரும், ராணுவத்தினரும் ஈடுபட்டுள்ளனர். எனவே, பண்டிட்டுகள் அலுவலகங்களுக்கு செல்ல வேண்டும். பயந்து வீட்டிலேயே இருந்தால் இனி அவர்களுக்கு சம்பளம் வழங்க முடியாது" என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.