தற்கொலை செய்த காதலர்களின் சடலங்களுக்கு திருமணம் செய்து வைத்த பெற்றோர்கள்...!
பெங்களூரு: உயிரோடு இருந்த போது வாழ்க்கையில் சேர முடியாத காதலர்கள், அவர்களது மரணத்திற்குப் பின்னர் ஒன்று சேர்ந்துள்ளனர். ஆனால், சொர்க்கத்தில் அல்ல, நிஜத்தில். புரியவில்லையா, இறந்த காதலர்களின் சடலங்களுக்கு திருமணம் செய்து வைத்து, அவர்களது ஆத்மாவை சாந்தி அடைய வைத்துள்ளனர் அவர்களது பெற்றோர்.
உயிருடன் இருந்தபோது கடுமையாக எதிர்த்து விட்டு, அவர்கள் இறந்த பின்னர் பிணங்களுக்குத் திருமணம் செய்து வைத்துள்ளனர் இந்த பெற்றோர்.
அனைத்து காதலர்களையுமே அவர்களது பெற்றோர் ஏற்றுக் கொள்வதில்லை. அவ்வாறு பெற்றோர் எதிர்ப்பை சந்திக்கும் காதலர்கள், வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொள்வர், அல்லது தற்கொலை செய்து கொள்கின்றனர்.
பெற்றோர் எதிர்ப்பு...
அந்த வகையில், கர்நாடக மாநிலம் பேலகவி (பெல்காம்) மாவட்டத்தில் இராகவுடா மாலகவுடா பாட்டீல் என்ற 24 வயது இளைஞரும், சங்கீதா என்ற 19 வயது இளம்பெண்ணும் கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்தனர். ஆனால் அவர்கள் இருவரும் வெவ்வேறுப் பிரிவைச் சேர்ந்தவர்கள் என்பதால், அவர்களது பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
தற்கொலை...
இருவரும் எவ்வளவோ போராடியும் அவர்ளது பெற்றோர் பிடிவாதமாக மறுத்துவிட்டனர். இதனால் மனமுடைந்த காதலர்கள் திங்களன்று ஒரு தனியார் தங்கும் விடுதியில் ஒரே துப்பட்டாவில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டனர்.
சாதியைக் காரணம் காட்டி...
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. காதலர்கள் தற்கொலை செய்து கொண்டது கவுரவக் கொலையாக கருதப்படாவிட்டாலும், சாதியை காரணம் காட்டி பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததே அவர்களின் உயிரை பறித்துவிட்டது.
அதிகரிக்கும் கவுரவக் கொலைகள்...
இந்தியாவில் கவுரவக் கொலைகள் நடைபெறுவது தொடர் கதையாகி வருகிறது. உதாரணமாக கடந்த சில தினங்களுக்கு முன்பு புதிதாக திருமணம் செய்து கொண்ட தம்பதியரை மணப்பெண்ணின் சகோதரன் படுகொலை செய்த சம்பவம் அரங்கேறியது.
பெங்களூரு சம்பவம்...
பெங்களூருவைச் சேர்ந்த கஸ்தூரி என்ற பெண் தனது முதல் கணவரை பிரிந்து முன்னாள் காதலனா வஸ்வராஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இதனால் ஆத்திரமடைந்த கஸ்துரியின் சகோதரன், தம்பதியர் இருவரையும் கொலை செய்துவிட்டார்.
இந்தியாவில் மட்டும்...
இந்தியாவில் கவுரவக் கொலைகள் குறித்து எந்த புள்ளி விவரமும் இல்லை. ஐ.நா. சபையின் கணக்கெடுப்புபடி கடந்த 2013ம் ஆண்டு மட்டும் உலகம் முழுவதும் 5000 கவுரவக் கொலைகள் நடந்திருப்பதாகவும், அதில் இந்தியாவில் மட்டும் 1000 கவுரவக் கொலைகள் நடந்திருப்பதாகவும் தெரியவந்துள்ளது.
சாதி வெறியே...
ஆனால் இராகவுடா - சங்கீதா ஜோடியின் மரணம் கவுரவக் கொலையாக கருதப்படாவிட்டாலும், அவர்களது உயிரைக் கொன்றது சாதி வெறியே.
மனம் மாறிய பெற்றோர்...
இந்நிலையில் காதலர்கள் மரணம் அவர்களது பெற்றோரின் மனதை மாற்றிவிட்டது. மருத்துவமனையின் சவக்கிடங்கில் இராகவுடாவின் பெற்றோரை அனுகிய சங்கீதாவின் உறவினர்கள், காதலர்கள் இருவருக்கு அவர்களது ஆசைப்படி திருமணம் செய்து வைத்துவிடலாம் என்று தெரிவித்தனர்.
சுடுகாட்டில் திருமணம்...
இதற்கு இராகவுடாவின் பெற்றோரும் சம்மதிக்க, திருமண ஏற்பாடும், இறுதி சடங்குக்கான ஏற்பாடும் ஒருசேர நடந்தது. கடைசியாக இடுகாட்டில் வைத்து இராகவுடாவின் கைகளைக் கொண்டு சங்கீதாவின் கழுத்தில் தாலி கட்டப்பட்டது. பின்னர் இருவரின் உடலும் ஒரு இடத்தில் புதைக்கப்பட்டது.
தாமதமான முடிவு...
இந்த சம்பவம் அந்த பகுதியில் உள்ள அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.
காதலர்களின் மரணத்திற்குப் பிறகு மனம் மாறிய பெற்றோர் சற்று முன்பே இந்த முடிவை எடுத்திருந்தால், அந்தக் காதலர்கள் சொர்க்கத்தில் அல்ல, நிஜத்திலேயே சொர்க்கலோகத்தைப் படைத்து அதில் சந்தோஷமாக வாழ்ந்திருப்பார்கள்.