போராட்டம் நடத்திய அப்பா அம்மா ஜெயிலில்.. குட்டிப் பாப்பா வீட்டில் தனியே.. உ.பியில் ஒரு அக்கப் போர்!
வாரணாசி: உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்தியதில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள இரு சமூக ஆர்வலர்கள் ஒரு வாரமாக தங்களது 14 மாத குழந்தையை பிரிந்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியையும் தேசத்தின் மீது அவர்களது பற்றையும் காட்டுகிறது.
நாடு முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து போராட்டம் கிளம்பியுள்ளது. இதனால் பெரும்பாலான இடங்களில் வன்முறை வெடித்துள்ளது.
இந்த நிலையில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஏற்பட்ட வன்முறையில் 8 வயது சிறுவன் உள்பட 15 பேர் உயிரிழந்துள்ளனர்.
போராட்டமா செய்றீங்க... ஒரு மணி நேரத்துல துடைந்தெறிந்திடுவோம்.. பாஜக எம்.எல்.ஏ. அதட்டல்
60 பேர் கைது
வாரணாசியில் நடைபெற்ற போராட்டத்தில் சமூக ஆர்வலர்கள் ஏக்தா மற்றும் ரவி சேகர் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது போராட்டம் நடத்திய 60 பேரை போலீஸார் கைது செய்தனர். அந்த 60 பேரில் ஏக்தாவும் ரவிசங்கரும் அடங்குவர்.
பெற்றோர்
இவர்களுக்கு 14 மாதத்தில் ஆயிரா என்ற குழந்தை உள்ளது. அந்த குழந்தையை உறவினர்கள் வீட்டில் விட்டுவிட்டு இருவரும் சிறை சென்றுள்ளனர். இவர்கள் கடந்த வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனர். ஒருவாரமாக பெற்றோரை காணாமல் குழந்தை தவித்து வருகிறது.
அமைதியான முறையில்
இதுகுறித்து அவர்கள் கூறுகையில் எங்கள் மகன் எந்த குற்றத்தையும் செய்யவில்லை. அப்படியிருக்கையில் அவரை போலீஸார் ஏன் கைது செய்தனர். அமைதியான முறையில்தானே போராட்டம் நடத்தினார். தாய், தந்தையை விட்டுவிட்டு ஒரு சிறிய குழந்தை எப்படியிருக்கும் என்பதை உங்களால் கற்பனை செய்ய முடியுமா?
அம்மா வேண்டும்
குற்றத்தை தடுக்க இதுதான் வழியா? தாய், தந்தையரை பார்க்காமல் குழந்தை சாப்பிடாமல் உள்ளது. எப்படியோ குழந்தைக்கு ஓரிரு ஸ்பூன் உணவை ஊட்டி வருகிறோம். எப்போது பார்த்தாலும் அம்மா, அப்பா வேண்டும் என்கிறாள்.
தெரியவில்லை
நாங்களும் அவர்கள் விரைவில் வந்துவிடுவார்கள் என கூறிவருகிறோம். என்ன செய்வது என்றே எங்களுக்கு தெரியவில்லை. இப்போது ஏக்தாவும் ரவியும் செய்ய வேண்டியதெல்லாம் ஜாமீன் கோரி விண்ணப்பித்து சட்டரீதியில் போராடுவதுதான் என தெரிவித்தனர். ஏக்தாவும ரவியும் காற்று மாசு குறித்து தன்னார்வல அமைப்பை நடத்தி வருகின்றனர். காற்று மாசான இடங்களில் மிக மோசமான இடமாக வாரணாசி விளங்குகிறது.