இது லிஸ்ட்லயே இல்லையே.. மகன்,மருமகளிடம் ரூ.5 கோடி இழப்பீடு கேட்டு கேஸ் போட்ட பெற்றோர்- ஏன் தெரியுமா?
ஹரித்வார்: உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பெற்றோர், தங்களுக்கு பேரக் குழந்தை பெற்றுத் தராத மகன், மருமகள் மீது ஹரித்வார் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர்.
ஒரு ஆண்டிற்குள் குழந்தை பெற்றுத் தர உத்தரவிடக் கோரியும், இல்லையென்றால் 5 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
தமிழகத்தில் 5 நாட்களுக்கு கூல் கிளைமேட்தான்... 14ல் மழை அடி வெளுக்கும் - எங்கே தெரியுமா?
பேரக் குழந்தை பெற்றுத் தராததால் பெற்ற மகன் மீதே வழக்குத் தொடர்ந்த சம்பவம் உத்தரகாண்ட் மாநிலம் மட்டுமல்லாது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரகாண்ட் பெற்றோர்
உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரைச் சேர்ந்தவர் சஞ்சீவ் ரஞ்சன் பிரசாத். இவர் பெல் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் தனது மனைவி சாத்னா பிரசாத்துடன் வசித்து வருகிறார்.
இவர்களது ஒரே மகனான ஷ்ரே சாகரை விமானி பயிற்சிக்காக அமெரிக்காவுக்கு அனுப்பி படிக்க வைத்துள்ளனர். படித்து முடித்த அவர் முன்னணி விமான நிறுவனம் ஒன்றில் விமானியாகப் பணிபுரிந்து வருகிறார்.
அதிர்ச்சி
கடந்த 2016ஆம் ஆண்டு நொய்டாவைச் சேர்ந்த ஷுபாங்கி சின்ஹா என்ற பெண்ணை திருமணம் செய்து வைத்துள்ளனர். மகனுக்கு திருமணம் செய்து தேனிலவுக்கு தாய்லாந்துக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
கடைசி காலத்தில் பேரக்குழந்தைகளோடு மகிழ்ச்சியாக வாழலாம் என வயதான தம்பதியர் திட்டமிட்டிருந்த நிலையில், மகனும் மருமகளும் தற்போது குழந்தை பெற்றுக்கொள்ள மாட்டோம் எனத் தெரிவித்துள்ளனர். இதனால் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர்.
நீதிமன்றத்தில் வழக்கு
இதையடுத்து, பேரக் குழந்தை வேண்டும் அல்லது ரூ. 5 கோடி இழப்பீடு வேண்டும் என்று கேட்டு மகன் மற்றும் மருமகள் மீது ஹரித்வார் நீதிமன்றத்தில் அவர்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
அவர்களது மனுவில், எங்களது ஒரே மகனை பல லட்சம் செலவு செய்து அமெரிக்காவுக்கு எல்லாம் அனுப்பி படிக்க வைத்தோம். 2016ஆம் ஆண்டில் திருமணமும் செய்து வைத்தோம். தேனிலவுக்கே 5 லட்ச ரூபாய் செலவு செய்து தாய்லாந்துக்கு அனுப்பி வைத்தோம்.
ஆடி கார்
ஹைதராபாத்தில் வசித்து வரும் மகனும் மருமகளும் வெளியில் சென்றுவர வசதியாக வங்கியில் கடன் பெற்று ரூ. 65 லட்சத்தில் ஆடி கார் ஒன்றையும் வாங்கிக்கொடுத்தோம். அவர்களின் மகிழ்ச்சிக்காக இவ்வளவு செய்தும், மருமகளின் பெற்றோர் பேச்சைக் கேட்டு அவர்கள் நடந்து வருகின்றனர். திருமணமாகி இத்தனை ஆண்டுகள் ஆகியும் எங்களுக்கு பேரக் குழந்தையைப் பெற்றுத் தரவில்லை என மனுவில் கூறியுள்ளனர்.
5 கோடி இழப்பீடு வேண்டும்
எங்களிடம் இருந்த எல்லா பணத்தையும் எங்கள் மகனின் நலனுக்காக கொடுத்துவிட்டோம். எங்கள் மகனும் மருமகளும் இன்னும் ஓராண்டில் ஒரு குழந்தை பெற்றுத் தர வேண்டும். இல்லையென்றால், எங்களுக்கு ஏற்பட்டுள்ள மன உளைச்சலுக்கு ரூ. 5 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்று உத்தரவிட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. குழந்தை பெற்றுத் தர வேண்டி பெற்றோர் வழக்கு தொடர்ந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.