மோடி அரசின் முதல் பட்ஜெட் தொடர்... மானியங்கள் குறைப்பு.. விலைகள் உயர வாய்ப்பு!
டெல்லி: பிரதமர் மோடி அரசின் முக்கியமான பாராளுமன்ற கூட்டத்தொடர் ஜூலை 7-ந் தேதி தொடங்கி ஆகஸ்டு 14-ந் தேதி வரை நடக்கிறது. இதில் பெருமளவு மானியக் குறைப்பு செய்யப்பட உள்ளதால் விலைகள் மேலும் உயரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்தத் தொடரில் ரயில்வே பட்ஜெட் 8-ந்தேதியும், பொது பட்ஜெட் 10-ந் தேதியும் தாக்கல் செய்யப்படுகிறது.
பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான புதிய அரசின் முதல் பாராளுமன்ற கூட்டத் தொடர் கடந்த 4-ந் தேதி தொடங்கி 10-ந் தேதி வரை நடந்தது.
தற்காலிக சபாநாயகர் தேர்வு செய்யப்பட்டு, எம்.பி.க்கள் பதவி ஏற்றுக் கொண்டனர். அதனைத் தொடர்ந்து சபாநாயகராக சுமித்ரா மகாஜன் தேர்வு செய்யப்பட்டார்.
பின்னர் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உரையாற்றினார்.
பட்ஜெட்
இதனைத் தொடர்ந்து பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடருக்கான ஏற்பாடுகள் நடந்தன. காங்கிரஸ் தலைமையிலான கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தேர்தலையொட்டி பிப்ரவரி மாதம் ஒரு இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தது. அந்த பட்ஜெட் ஜூலை 31-ந் தேதிக்குள் முடிகிறது. எனவே அதற்கு முன்னதாக பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட வேண்டும்.
ஒரு மாதம்
இந்நிலையில் பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சக குழு கூட்டம் நேற்று மத்திய மந்திரி வெங்கையா நாயுடு தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில் பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரை ஜூலை மாதம் 7-ந் தேதி தொடங்குவது என முடிவு செய்யப்பட்டது.
பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜூலை மாதம் 7-ந் தேதி தொடங்கி ஆகஸ்டு மாதம் 14-ந் தேதி வரை நடைபெறும்.
ஏறத்தாழ ஒரு மாதம் நடைபெறும் இந்தக் கூட்டத் தொடரில் மத்திய அரசின் 2014- 2015-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை நிதி மந்திரி அருண் ஜெட்லி ஜூலை 10-ந் தேதி தாக்கல் செய்கிறார்.
ரயில்வே பட்ஜெட்
முன்னதாக ரெயில்வே பட்ஜெட்டை ஜூலை 8-ந் தேதி ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடா தாக்கல் செய்கிறார்.
மத்திய அரசின் பொருளாதார ஆய்வறிக்கை ஜூலை 9-ந் தேதி சமர்ப்பிக்கப்படுகிறது. பின்னர் பட்ஜெட் மீதான விவா தம் நடைபெறும். ஆகஸ்டு 14-ந் தேதி பட்ஜெட் கூட்டத்தொடர் முடிவடைகிறது. மொத்தம் 28 நாட்கள் பாராளுமன்ற கூட்டம் நடக்கிறது.
மேலும் விலை உயர்வு
ஈராக்கில் ஏற்பட்டுள்ள உள்நாட்டு போர் காரணமாக கச்சா எண்ணெய் விலை கணிசமாக உயர்ந்து வருகிறது. இதன்காரணமாக இந்தியாவிலும் பொருளாதார நிலை பாதிக்கப்பட்டு உள்ளது. எனவே நாட்டின் பண வீக்கத்தை கட்டுப்படுத்துதல், பொருளாதார வளர்ச்சி, விலைவாசி உயர்வை சமாளிப்பது, பல்வேறு பொருட்களுக்கு வழங்கப்படும் மானியங்களை குறைப்பது போன்ற அம்சங்கள் உள்ளதாக இந்த பொது பட்ஜெட் இருக கும் என்று கருதப்படுகிறது.
சில மானியங்களை குறைப்பதன் காரணமாக அவற்றின் விலைகள் பட்ஜெட்டில் உயர்த்தப்படும் என்று கருதப்படுகிறது.
சலுகைகள்
அதேசமயம் மாத சம்பளதாரர்களின் வருமான வரி விலக்குக்கான உச்சவரம்பை உயர்த்துதல் போன்ற சில சலுகைகளையும் இந்த பட்ஜெட்டில் எதிர்பார்க்கலாம்.
காங்கிரசுக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து
அதேபோல, 44 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றதால் பாராளுமன்ற எதிர்க்கட்சி அந்தஸ்து பெறும் உரிமையை காங்கிரஸ் இழந்துவிட்டது. ஆனாலும் ஆளுங்கட்சிக்கு அடுத்தபடியாக, இரண்டாவது பெரிய கட்சியான காங்கிரசுக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து வழங்க வேண்டும் என்று காங்கிரஸ் கோரிக்கை விடுத்திருந்தது. எனவே இந்த கூட்டத் தொடரில் அந்தப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி விழும் என எதிர்ப்பார்க்கலாம்.
மிகுந்த எதிர்ப்பார்ப்பு
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் முதல் பட்ஜெட் என்பதால் அரசியல் கட்சிகள் மட்டுமல்லாது, பொதுமக்களும் இந்த பட்ஜெட்டை மிகவும் ஆவலோடு எதிர்பார்க்கின்றனர். மோடி அரசின் பயணம் எப்படிப்பட்டதாக இருக்கும் என்பதற்கு இந்தத் கூட்டத் தொடர்தான் கட்டியம்கூறப் போகிறது.