'Nimbuzz' இணையதளம் மூலமாக பாட்னா குண்டுவெடிப்புக்கான "உத்தரவு" வந்தது?
டெல்லி: பாட்னா குண்டுவெடிப்புக்கான உத்தரவு 'Nimbuzz' இணையதளம் மூலமாக பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக தேசிய புலனாய்வு அமைப்பினர் தெரிவித்துள்ளனர். அத்துடன் பாட்னா மற்றும் புத்த கயா குண்டுவெடிப்புகளை இந்தியன் முஜாஹிதீனின் ராஞ்சி கிளைதான் நடத்தியுள்ளது என்பதும் விசாரணயில் தெரியவந்துள்ளது.
இந்தியன் முஜாஹிதீன் அமைப்பின் நிறுவனராக கருதப்படும் ரியாஸ் பட்கல் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவன். இவனும் இணை நிறுவனரான யாசின் பட்கலும் ஒரே கிராமத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களில் யாசின் பட்கல் பீகாரில் கடந்த ஆகஸ்ட் மாதம் சிக்கினான்.
ஆனால் ரியாஸ் பட்கல் பாகிஸ்தானுக்கு தப்பியோடிவிட்டான். அவன் அங்கிருந்தபடியே இந்தியாவில் தாக்குதல் நடத்துவதற்கான உத்தரவுகளை பிறப்பித்திருக்கிறான். அவனுடன் தெஷீன் அக்தர்தான் நேரடி தொடர்பில் இருப்பதும் தேசிய புலனாய்வு அமைப்பினர் கண்டுபிடித்துள்ளனர்.

அதாவது 'Nimbuzz' இணையதளம் மூலமாக சந்தேகத்துக்குரிய செல்போன்களுக்கு வரும் மெசேஜ்களை தேசிய புலனாய்வு இடைமறித்துப் பார்த்ததில் இது தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது. ராஞ்சியில் ஹைதர் அலி என்ற தீவிரவாதி தங்கியிருந்த ஹோட்டலில் இருந்து வெடிக்காத குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. ஆனால் அவன் தப்பி ஓடிவிட்டான்.
அங்கு கைப்பற்றப்பட்ட குண்டுகள் புத்த கயாவிலும் பாட்னாவில் வெடித்தவை. அதனாலேயே இந்தியன் முஜாஹிதீனின் ராஞ்சி கிளைதான் இரு குண்டுவெடிப்புகளையும் நிகழ்த்தியிருக்கிறது என்று தேசிய புலனாய்வு அமைப்பினர் உறுதியுடன் நம்புகின்றனர்.
தொடர்ந்து நடத்தப்பட்டு வரும் விசாரணையில் இன்னும் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications