சபரிமலை: வெடித்த போராட்டம்.. பெண்கள் நுழைவிற்கு எதிராக பெண்களே கேரளாவில் பேரணி!
சபரிமலை கோவிலுக்குள் பெண்கள் நுழைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் போராட்டங்கள் வலுத்து இருக்கிறது.
திருவனந்தபுரம்: சபரிமலை கோவிலுக்குள் பெண்கள் நுழைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் போராட்டங்கள் வலுத்து இருக்கிறது.
வலதுசாரி அமைப்புகளை சேர்ந்த பெண்களே கூட இந்த போராட்டத்தில் கலந்து கொண்டு இருக்கிறார்கள். பிரசித்திபெற்ற கேரளாவில் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.
இதனால் அனைத்து வயது பெண்களும் இனி சபரிமலை கோவிலுக்குள் செல்ல முடியும். இந்த நிலையில் இந்த தீர்ப்பிற்கு எதிராக அம்மாநிலத்தில் பல இடங்களில் போராட்டம் நடந்து வருகிறது.
[ சபரிமலை ஐயப்பன் கோயில் தீர்ப்புக்கு எதிராக, உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு.. அடுத்து என்ன? ]
பெரிய போராட்டம் நடந்தது
இந்த தீர்ப்பிற்கு எதிராக, தீர்ப்பு வந்த சமயத்திலேயே இந்து அமைப்புகள் குரல் கொடுத்து இருந்தது. இந்த நிலையில் கடந்த வாரம் புதன் கிழமை, இந்த தீர்ப்பிற்கு எதிராக கேரளாவின் பந்தளம் பகுதியில் ஆயிரக்கணக்கில் மக்கள் திரண்டனர். பல நூறு பெண்கள் உட்பட, பலர் அங்கு பேரணியாக சென்று தீர்ப்பிற்கு எதிராக போராட்டம் நடத்தினார்கள்.
மீண்டும் போராட்டம் நடந்தது
ஆனால் இந்த போராட்டம் பெரிய அளவில் நடந்தும் கவனம் ஈர்க்கவில்லை என்று, நேற்று மீண்டும் போராட்டம் நடந்தது. சென்னை, டெல்லி, பெங்களூர், திருவனந்தபுரம் ஆகிய நான்கு நகரங்களில் இந்த போராட்டம் நடந்தது. பல்வேறு இந்து அமைப்புகள் இந்த போராட்டத்தை சேர்ந்து நடத்தினார்கள். முக்கியமாக பெண்கள், இந்த தீர்ப்பிற்கு எதிராக ஆயிரக்கணக்கில் குவிந்து இருக்கிறார்கள்.
கோரிக்கை என்ன
இவர்கள் வைக்கும் கோரிக்கை இரண்டுதான். சபரிமலை கோவிலில் பாரம்பரியமாக கடைபிடிக்கப்படும் நடைமுறையை கைவிட கூடாது. அதற்கு அடுத்து, இந்த தீர்ப்பிற்கு எதிராக அம்மாநில அரசு உடனடியாக சீராய்வு மனுதாக்கல் செய்ய வேண்டும். இந்த கோரிக்கைகளை வைத்தே இவர்கள் போராடி வருகிறார்கள்.
தொடர்ந்து மறுப்பு
ஆனால் அம்மாநில அரசு இந்த தீர்ப்பிற்கு எதிராக மனுதாக்கல் செய்ய போவதில்லை என்று உறுதியாக உள்ளது. எந்த விதத்திலும் இந்த தீர்ப்பிற்கு எதிராக இருக்க போவதில்லை என்பதில் உறுதியாக உள்ளது. மேலும் கோவிலுக்கு வரும் பெண்களுக்கு போதுமான பாதுகாப்பும் அளிக்கப்படும் என்றும் அம்மாநில அரசு கூறியுள்ளது.
மனுத்தாக்கல்
அரசு மறுத்துள்ள நிலையில் சபரிமலை தீர்ப்பிற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது. சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும் தீர்ப்பிற்கு எதிராக சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தேசிய ஐயப்ப பக்தர்கள் சங்கம் சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.