கடலைமிட்டாய், ஊறுகாயைவிட பீட்சாவுக்கு வரி குறைவு! ஜிஎஸ்டி கூத்து #gstrollout #GSTTryst
சென்னை: ஜிஎஸ்டி வரி விதிப்பு நாளை முதல் அமலுக்கு வர உள்ளது. இதில் தற்போதைய சில வரிகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
இதன்படி கடலைமிட்டாய், ஊறுகாய் போன்ற குடிசை தொழிலில் உற்பத்தியாகும் பொருட்களுக்கு 18 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது.
ஜிஎஸ்டியால் வரி விதிப்பால் பல சிறு தொழில்கள் பாதிப்பிற்குள்ளாகும் என்ற பதற்றம் அதிகரித்துள்ளது. 18 சதவிகித வரி விதிப்பால் குடிசை தொழிலாக உள்ள கடலை மிட்டாய், ஊறுகாய் அதிகம் பாதிக்கப்படும் என்று உற்பத்தியாளர்கள் அஞ்சுகின்றனர்.
குடிசை தொழில்
தென் மாவட்டங்களில் கடலை மிட்டாய் குடிசை தொழிலாக தயாரிக்கப்படுகிறது. கடலை மிட்டாய்க்கு ஜிஎஸ்டியில் 18 சதவிகிதம் வரி விதிக்கப்பட்டுள்ளது. இதனால் விலை உயரும் அபாயம் உள்ளது. புரத சத்து கொண்ட கடலை மிட்டாய்க்கு வரி விலக்கு அளிக்க வேண்டும் அல்லது 5% வரி மட்டுமே விதிக்க வேண்டும் என்பது இதை தயாரிப்போர் கோரிக்கை.
தமிழர் உணவு
ஊறுகாய்க்கு தமிழர்கள் உணவிகள் அதிக முக்கியத்துவம் உண்டு. தமிழக அரசு 50 கிராமுக்குக் கீழே உள்ள ஊறுகாய்ப் பொட்டலங்களுக்கு வரிவிலக்கு கொடுத்திருந்தது. 50 கிராமுக்கு மேலே இருக்கக்கூடிய பாட்டில்கள் மற்றும் கண்டெய்னர்களுக்கு 5 சதவிகித வரி விதித்திருந்தது. இப்போது ஜிஎஸ்டியில் ஊறுகாய்க்கு18 சதவிகிதம் வரி விதிக்கப்பட்டுள்ளது.
தொழில் பாதிப்பு
சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்கள், பெரிய நிறுவனங்களோடு, போட்டி போட முடியாது. எனவே 18 சதவிகித ஜிஎஸ்டி வரியால் குடிசைத்தொழிலாக செய்யும் ஊறுகாய், கடலைமிட்டாய் உற்பத்தி தொழில் பாதிக்கப்படும் அபாயம் எழுந்துள்ளது.
பிஸ்சாவுக்கு குறைவு
அதேநேரம் பீட்சா பிரெட்டுகளுக்கு 5 சதவீத வரிதான் ஜிஎஸ்டியில் விதிக்கப்பட்டுள்ளது. ஆடம்பர பொருளான பிஸ்சாவுக்கு அதிக வரி விதிக்கப்பட்டிருக்க வேண்டும், ஏழை, நடுத்தர மக்களின் தேவையான கடலைமிட்டாய், ஊறுகாய்க்கு விலையை குறைத்திருக்க வேண்டும் என்கிறார்கள் பொருளாதார வல்லுநர்கள்.
எஸ்யூவி கார்கள் விலை குறையும்
இப்படித்தான் எஸ்யூவி எனப்படும் சொகுசு கார்கள் மற்றும் சிறு கார்கள் என அனைத்து வகை கார்களுக்கும் 28 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளது. முந்தைய வரியோடு ஒப்பிட்டால் எஸ்யூவி வகை கார்களுக்கு இது குறைந்த அளவாகும். இதனால் சிறு, நடுத்தர கார்கள் விலையில் லேசான உயர்வும், எஸ்யூவி கார்கள் விலையில் நல்ல விலை குறைப்பும் இருக்கப்போகிறது. இதுவும் நடுத்தர மக்களுக்கு பலனளிப்பதாக இல்லை.