மம்தா கட்சிக்கு சப்போர்ட்டாக இருக்கும் வங்கதேசத்தினரையும் வாக்காளர் லிஸ்டில் சேருங்க.. எம்எல்ஏ ஐடியா
கொல்கத்தா:வங்கதேசத்தில் இருந்து வருபவர்கள் இந்துத்துவா உணர்வில் பாஜகவுக்கு வாக்களிக்கின்றனர். இதனால் மேற்கு வங்க முதலமைசசர் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிக்கும் வங்கதேசத்தினரின் பெயரை மட்டுமே வாக்காளர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என அக்கட்சியின் எம்எல்ஏ கோகன் தாஸ் பேசியது சர்ச்சையை கிளப்பி உள்ளது. இதனால் பாஜக கொந்தளித்துள்ளது.
நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம், திருத்தம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களிலும் இது நடத்தப்பட்டு வருகிறது.
இந்த முகாமில் 17 வயது நிரம்பியவர்கள் முதல் விண்ணப்பம் செய்யலாம். இதற்காக சிறப்பு முகாம்களும் நடத்தப்பட்டன.

மேற்கு வங்கத்தில் பணி
இந்நிலையில் தான் வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பான பணி மேற்கு வங்க மாநிலத்திலும் நடைபெற்று வருகிறது. இங்கு திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடக்கும் நிலையில் முதலமைச்சராக மம்தா பானர்ஜி உள்ளார். இவரது கட்சியின் எம்எல்ஏவாக உள்ளவர் தான் கோகன் தாஸ். இவர் பர்தமான் தக்சி சட்டசபை தொகுதி எம்எல்ஏவாக உள்ளார்.

திரிணாமுல் எம்எல்ஏ பேச்சு
இந்நிலையில் தான் கோகன் தாஸ் தனது தொகுதியில் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசினார். அப்போது அவர் பேசியது சர்ச்சையை கிளப்பி உள்ளது. இந்த கூட்டத்தில் கோகன் தாஸ், வங்காளதேசத்தில் இருந்து இந்தியா வரும் நபர்களில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு ஓட்டளிக்க தயாராக உள்ளவர்களை மட்டுமே வாக்காளர் பட்டியலில் இடம்பெற செய்ய வேண்டும் என கூறியது தான் சர்ச்சையை கிளப்பி உள்ளது.

வீடியோவில் கூறியது என்ன?
இதுதொடர்பான வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில் கோகன் தாஸ், ‛‛வங்காளதேசத்தில் இருந்து ஏராளமானவர்கள் மேற்கு வங்கம் வருகின்றனர். இவர்களில் பலர் இந்துத்துவ உணர்வுகளின் அடிப்படையில் பாஜகவுக்கு வாக்களிக்கின்றனர். நம் கட்சியை ஆதரிப்பவர்கள் மட்டுமே வாக்காளர் பட்டியலில் இடம் பெறுவதை உறுதி செய்ய வேண்டும்'' என கூறியுள்ளார். இந்த வீடியோ இணையதளத்தில் வேகமாக பரவிய நிலையில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.

விளக்கமளித்த எம்எல்ஏ
இதுபற்றி கோகன்தாஸிடம் கேட்டபோது, ‛‛வங்காளதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக பலர் மேற்கு வங்காளத்துக்குள் நுழைகின்றனர். வாக்காளர் பட்டியலில் அவர்களின் பெயர் இடம் பெறக் கூடாது என கட்சி தொண்டர்களிடம் கூறினேன்''எனக்கூறி சமாளித்தார். இதற்கிடையே தான் எம்எல்ஏவின் இந்த பேச்சுக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

பாஜக கடும் எதிர்ப்பு
இதுபற்றி பாஜகவின் செய்தி தொடர்பாளருமான சவும்யராஜ் கூறுகையில், ‛‛இந்த விவகாரத்தை அரசியலாக்குவதற்கு பதில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை கண்டறிந்து மத்திய மாநில அரசிடம் தெரிவிக்க வேண்டும். இதற்காக தான் நாங்கள் குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்துவோம்'' என கண்டிப்புடன் தெரிவித்தார்.

எல்லை மாநிலம்
மேற்கு வங்க மாநிலம் வங்கதேசத்தின் எல்லை பகுதியில் உள்ளது. இதனால் வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் மேற்கு வங்கத்துக்குள் நுழைந்து சட்டவிரோதமாக வசித்து வருவதாக பொதுவான குற்றச்சாட்டுகள் உண்டு. மேலும் இவ்வாறு நுழையும் நபர்களுக்கு மேற்கு வங்க அரசு வாக்குரிமை அளித்து தங்கள் கட்சிக்கு வாக்களிக்க செய்கின்றனர் என பாஜக தொடர்ந்து கூறி வருகிறது. இந்நிலையில் தான் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ கோகன் தாஸ் பேசியது எரியும் நெருப்பில் எண்ணெயை ஊற்றியது போல் மாறி சர்ச்சையை கிளப்பி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications