காங். கூட்டணி வென்றாலும் மீண்டும் பிரதமராக மாட்டேன்: மன்மோகன் சிங்- ராகுலுக்கு வழிவிட்டார்!
டெல்லி: லோக்சபா தேர்தலுக்குப் பின்னர் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றாலும் தாம் மீண்டும் பிரதமராகப் போவதில்லை என்று பிரதமர் மன்மோகன்சிங் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் மன்மோகன்சிங் கூறியதாவது: அண்மைய சட்டசபை தேர்தல்களில் பெருமளவிலான மக்கள் வாக்களித்துள்ளனர். இந்த தேர்தல்களில் எனது கட்சி வெற்றி பெறவில்லை. இருப்பினும் மக்கள் அளித்த தீர்ப்பை ஏற்று தேர்தல் முடிவுகளில் இருந்து பாடம் கற்று கொள்வோம்.
2014ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலுக்குப் பின்னர் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கம் புதிய பிரதமரை தேர்ந்தெடுக்கும். அவரிடம் எனது பொறுப்புகளை நான் ஒப்படைப்பேன். காங்கிரஸின் பிரதமர் வேட்பாளர் யார் என்பது குறித்து கட்சி உரிய நேரத்தில் முடிவு செய்யும்.
இளைய தலைமுறை தலைவர்கள் இந்த நாட்டை வழிநடத்தக் கூடிய திறமை படைத்தவர்கள் என்பதில் நான் நம்பிக்கையோடு இருக்கிறேன் என்றார்.
பின்னர் செய்தியாளர்களின் கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த போதும், நாட்டின் பிரதமராக மீண்டும் 3வது முறையாக பொறுப்பேற்க தாம் விரும்பவில்லை. பிரதமர் பதவி வகிக்க ராகுல்காந்திக்கு அனைத்து வித தகுதிகளும் இருக்கின்றன என்றார்,
மேலும் பிரதமர் பதவியில் இருந்து ஒருபோதும் தாம் ராஜினாமா செய்ய வேண்டும் என்று நெருக்கடி ஏற்பட்டது இல்லை என்றும் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு எப்படி இருந்தேனோ அதேபோல் இருக்கிறேன் என்றும் மன்மோகன்சிங் கூறினார்.
இரட்டை அதிகார மையம்
மற்றொரு கேள்விக்குப் பதிலளித்த மன்மோகன்சிங், காங்கிரஸ் கட்சிக்கு தலைவராக இருப்பவரே பிரதமராக இல்லாமல் இருவராக அதாவது இரட்டை அதிகார மையம்தான் சிறந்ததாக இருக்கிறது என்றார்.
சீக்கியர் கலவரம்
1984ஆம் ஆண்டு சீக்கியர் படுகொலை பற்றிய கேள்விக்கு பதிலளித்த மன்மோகன்சிங், அந்த சம்பவத்துக்காக பகிரங்கமாக மன்னிப்பு கேட்கிறோம். அதுபோன்ற நிகழ்வு மீண்டும் நிகழக் கூடாது என்றார்.
சிலிண்டர்கள் எண்ணிக்கை..
கேரளாவை சேர்ந்த செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு, மேற்கு தொடர்ச்சி மலை பாதுகாப்பு தொடர்பான கஸ்தூரி ரங்கன் குழுவின் அறிக்கை குறித்து மாநில அரசுகளுடன் விவாதித்துக் கொண்டிருக்கிறோம். சமையல் எரிவாயு சிலிண்டர்களின் எண்ணிக்கையை 12 ஆண்டாக உயர்த்துவது குறித்து முடிவெடுக்கவில்லை என்றார்.
அமெரிக்கா, பாகிஸ்தான் உறவுகள்..
அதேபோல், தெற்காசிய பிராந்தியத்தில் நிலைத்தன்மை ஏற்பட பாகிஸ்தானுடனான உறவு வலுப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினான் மன்மோகன்சிங். அமெரிக்காவுடனான உறவில் அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டதே மிகவும் உச்சபட்ச தருணமாக கருதுகிறேன் என்றார்.