அமைச்சர்களுக்கு தீபாவளி விருந்து கொடுத்த நரேந்திர மோடி
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி, தனது அமைச்சரவை சகாக்களுக்கு தீபாவளியையொட்டி இரவு விருந்து கொடுத்துக் கெளரவித்தார்.
நேற்று இரவு இந்த விருந்து நடந்தது. இதில் மோடி அமைச்சரவையில் இடம் பெற்ற அமைச்சர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

மகாராஷ்டிராவில் பாஜக உறவை முறித்துக் கொண்ட சிவசேனா கட்சியைச் சேர்ந்த மத்திய அமைச்சர் அனந்த் கீதேவும் விருந்தில் கலந்து கொண்டு சாப்பிட்டார்.
கனரக தொழில்துறை அமைச்சராக கீதே இருக்கிறார். இந்த விருந்துக்காக அவர் மும்பையிலிருந்து கிளம்பி வந்தார். இதுகுறித்து கீதே கூறுகையில், மத்தியில், பாஜக, சிவசேனா கூட்டணி தொடர்கிறது. எனவேதான் நான் பிரதமர் வைத்த விருந்தில் கலந்து கொண்டேன் என்று கூறினார் கீதே.
மகாராஷ்டிராவில் சட்டசபைத் தேர்தலுக்கு முன்பு தங்களது நீண்ட கால உறவை முறித்துக் கொண்டன இரு கட்சிகளும். தேர்தலில் பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. சிவசேனா 2வது இடத்தைப் பிடித்துள்ளது. தற்போது ஆட்சியமைக்க சிவசேனாவின் உதவியை பாஜக நாடவுள்ளது. சிவசேனாவும் கூட மீண்டும் கை குலுக்கத் தயாராகும் என்றே தெரிகிறது.
இதையடுத்து இரு கட்சியினரும் மீண்டும் உறவைத் தொடரும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. இந்த நிலையில்தான் பிரதமர் வைத்த விருந்தில் சிவசேனாவைச் சேர்ந்த மத்திய அமைச்சரும் கலந்து கொண்டார்.
விருந்தில் வட இந்திய, தென் இந்திய சைவைச் சாப்பாடு வகை வகையாக பரிமாறப்பட்டதாம்.
இந்த விருந்தின்போது மத்திய அரசின் சுவாச்ச பாரதம் திட்டத்தை அனைவரும் சேர்ந்து தீவிரமாக மேற்கொள்ள வேண்டும் என்று பிரதமர் அறிவுறுத்தினாராம். இந்தத் திட்டத்தை வெற்றித் திட்டமாக மாற்றுமாறும் அவர் கேட்டுக் கொண்டாராம்.












Click it and Unblock the Notifications