தமிழகத்துக்கு முதல் கட்டமாக ரூ.940 கோடி வெள்ள நிவாரண நிதி- மத்திய அரசு ஒதுக்கீடு
டெல்லி: தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் கோரிக்கையை உடனடியாக ஏற்று வெள்ள நிவாரண நிதியாக முதல் கட்டமாக ரூ939.63 கோடி ஒதுக்கீடு செய்து பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.
அடை மழை, பெருவெள்ளத்தால் தமிழகத்தின் பல பகுதிகள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதுவரை 169 பேரை இந்த மழை வெள்ளம் பலி கொண்டுள்ளது.
இது தொடர்பாக இன்று பிரதமர் மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார். அதில் தமிழக மழை வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரண நிதியாக ரூ8,481 கோடி தேவைப்படுவதாகவும் முதல் கட்டமாக ரூ2,000 கோடியை உடனே வழங்க வேண்டும்; வெள்ள சேதத்தைப் பார்வையிட மத்திய குழுவை உடனே அனுப்ப வேண்டும் என்றும் ஜெயலலிதா கோரியிருந்தார்.
இக்கடிதத்தை தமிழக அரசின் சிறப்பு பிரதிநிதி எஸ்.டி.கே. ஜக்கையன் தலைமையிலான குழுவினர் பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பியிருந்தது. இந்த கடிதம் அனுப்பப்பட்ட சில மணிநேரத்தில், தமிழக மழை வெள்ள நிவாரண நிதியாக முதல் கட்டமாக ரூ939.63 கோடியை ஒதுக்கி பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
Centre sanctions over Rs 939 crore as flood relief assistance to Tamil Nadu https://t.co/9vKqYnwSGB
— PIB India (@PIB_India) November 23, 2015
மேலும் வெள்ள சேத விவரங்களை மத்திய குழு பார்வையிட்ட பின்னர் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் மத்திய அரசு கூறியுள்ளது.