மக்களுக்கு நியாயமாக கிடைக்க வேண்டியதை ஆதார் நிச்சயம் தரும்... மோடியின் ராஜதந்திர விளக்கம்!
ஆதார் அட்டையின் மிகப்பெரிய பயனே மக்கள் தங்களுக்கு கிடைக்கவேண்டியவற்றை நிச்சயம் பெற்றே தீருவார்கள் என்பதே என்று பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளித்துள்ளார்.
டெல்லி: ஆதார் அட்டையின் மிகப்பெரிய நல்ல விஷயமே மக்கள் தாங்கள் பெற உரித்தான விஷயத்தை நிச்சயம் பெற்றுத் தீருவார்கள் என்பதே என்று பிரதமர் நரேந்திர மோடி நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடந்த நுகர்வோர் பாதுகாப்பு குறித்த சர்வதேச மாநாட்டை தொடங்கி வைத்து பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது : நுகர்வோருக்குப் பாதுகாப்பு அளிக்கும் வகையில் புதிய நுகர்வோர் சட்டம் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நுகர்வோரை தவறான வகையில் திசை திருப்பும் விளம்பரங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்றார்.
நுகர்வோர்கள் பயனடையும் வகையில் ஜிஎஸ்டி சட்டத்தை அரசு கொண்டு வந்துள்ளது. நுகர்வோருக்கு இது நீண்ட கால அடிப்படையில் பயன்தரும். தொழில் நிறுவனங்களுக்கு இடையே போட்டி ஏற்படுவதால் பொருட்களின் விலை குறையும். இதன் பலன் நுகர்வோரைச் சென்றடையும் என்றும் கூறினார்.
ஆதார் அட்டை மூலம் மிகப்பெரிய நன்மை ஏற்பட்டு உள்ளது. மக்கள் தாங்க பெற உரிமையுள்ளவற்ற பெற்றுத் தர ஆதார் உதவுகிறது என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மத்திய அரசின் நலத்திட்ட உதவிகளைப் பெற ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடுவை மார்ச் 31, 2018 வரை நீட்டித்திருப்பதாக மத்திய அரசு தரப்பு உச்சநீதிமன்றத்தில் நேற்று தான் கூற இருக்கிறது. இத்தகைய சூழலில் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் என்ற ரீதியில் அது நியாயம் தான் என்றும் பிரதமர் பேசியுள்ளார்.
மொபைல் எண்களுடன் ஆதார் எண்ணை இணைக்கும் உத்தரவை எதிர்த்து உச்சநிதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனால் ஆதார் எண்ணிற்கு மாற்றாக வேறு ஆதாரத்தை கோரலாமா என்று மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. இதனிடையே மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தன்னுடைய தொலைபேசி இணைப்பு துண்டிக்கப்பட்டாலும் பரவாயில்லை ஆதார் எண்ணை இணைக்க முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மக்களின் தனிமனித உரிமைகளில் மத்திய அரசு தலையிடுவதாகவும் மம்தா குற்றம்சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.