ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் தலை மீது தொங்கும் கத்தி.. "பயப்படுறீங்களா மோடி" என கேட்கும் கேஜ்ரிவால்
டெல்லி: டெல்லியில் 21 ஆம் ஆத்மி எம்எல்ஏக்களின் பதவியைக் காப்பாற்ற வகை செய்யும் புதிய சட்ட மசோதாவில் கையெழுத்திட குடியரசுத் தலைவர் மறுத்துவிட்ட நிலையில் ஆம் ஆத்மியை கண்டு அஞ்சி மோடி இவ்வாறு பழி வாங்குகிறார் என்று முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் புகார் கூறியுள்ளார்.
முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் தலைமையிலான டெல்லி அரசு, கடந்த ஆண்டு மார்ச் 13ம் தேதி 21 ஆம் ஆத்மி எம்எல்ஏக்களை சட்டப்பேரவை செயலாளர்களாக நியமித்தது.
இதனிடையே, எம்எல்ஏக்கள் ஆதாயம் தரும் 2 பதவிகளை வகிப்பது அரசியலமைப்பு சட்டத்தை மீறிய செயல். எனவே, அவர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று பாஜக சார்பில் ஜனாதிபதியயிடம் புகார் தரப்பட்டது. தேர்தல் ஆணையத்தின் கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து சம்பந்தப்பட் எம்எல்ஏக்களிடம் ஆணையம் விளக்கம் கேட்டது.
சட்டத் திருத்தம்
இதனிடையே, பேரவை செயலாளர்களாக நியமிக்கப்பட்ட எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவதைத் தடுக்க, டெல்லி எம்எல்ஏக்கள் (தகுதி நீக்கம்) சட்டம் 1997-ல் திருத்தம் கொண்டுவர டெல்லி அரசு முடிவு செய்தது.
முன்கூட்டியே அமல்
இதன்படி, ஆதாயம் தரும் 2 பதவிகளை வகிக்க தடை செய்யும் சட்டத்திலிருந்து 21 எம்எல்ஏக்களுக்கு விலக்கு அளிக்க வகை செய்யும் மசோதாவை இயற்றி அதை முன்கூட்டியே நடைமுறைப்படுத்தவும் திட்டமிட்டது.
கையெழுத்திட மறுப்பு
இந்த மசோதா ஆளுநர் நஜிப் ஜங் மூலம் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தனது பரிந்துரையுடன் மத்திய அரசு இந்த மசோதாவை ஒப்புதலுக்காக ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு அனுப்பி வைத்தது. ஆனால் இதைப் பரிசீலித்த பிரணாப், மசோதாவில் கையெழுத்திட மறுத்துவிட்டதாக தகவல் வெளியானது.
இலவச பணிதானே
இதுகுறித்து முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் செய்தியாளர்களிடம் கூறியதாவது: எங்கள் கட்சி எம்எல்ஏக்களுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கி உள்ளோம். ஆனால் அவர்கள் இதற்காக கூடுதல் வசதியைப் பெறாமல் இலவசமாக பணியாற்றுகிறார்கள். ஹரியானா, பஞ்சாப், குஜராத், மேற்குவங்கம் உள்ளிட்ட பல மாநிலங்களில், பேரவை செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அவுங்க கொடுக்குறாங்க
பஞ்சாபில் நியமிக்கப்பட்டுள்ளவர்கள் மாதம் ரூ.1 லட்சம் பெறுவதுடன், கார், பங்களா வசதியும் வழங்கப்படுகிறது. ஆனால் அவர்களை தகுதி நீக்கம் செய்யாத மத்திய அரசு, டெல்லி எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய துடிப்பது ஏன்?
அந்த பயம் இருக்கட்டும்
ஏனென்றால் ஆம் ஆத்மியைக் கண்டு பிரதமர் மோடி பயப்படுகிறார். டெல்லி பேரவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஏற்பட்ட தோல்வியை பிரதமர் மோடியால் ஜீரணிக்க முடியவில்லை. அதனால்தான் அரசியல் பழிவாங்கும் போக்குடன் எங்களை செயல்பட விடாமல் தடுக்க முயற்சிக்கின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
காங்கிரசும் எதிர்ப்பு
காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் பி.எல்.புனியா கூறும்போது, டெல்லி எம்எல்ஏக்கள் சட்ட திருத்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க குடியரசுத்தலைவர் மறுத்துவிட்டதால், 21 ஆம் ஆத்மி எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும். இந்த விவகாரத்தில் தவறான தகவலை தெரிவித்த முதல்வர் கேஜ்ரிவாலும் பதவி விலக வேண்டும்" என்றார்.