மகன் பிரதமராக இருந்தாலும்... வீல் சேரில் வந்து பழைய நோட்டுகளை மாற்றிய ஹீராபென் மோடி.. பிளாஷ்பேக்!
மகன் நாட்டின் பிரதமராக இருந்தபோதிலும் குஜராத்தில் வசிக்கும் அவரது தாய் ஹீராபென் மோடி கடந்த ஆண்டு பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது வரிசையில் நின்று ரூ.500 நோட்டுகளை மாற்றினார்.
காந்தி நகர்: பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது நரேந்திர மோடியின் தாய் ஹீராபென் மோடி காந்தி நகரில் உள்ள வங்கிக்கு நேரில் சென்று பழைய ரூ.500 நோட்டுகளை மாற்றியது நிழலாடும் நினைவுகளாக உள்ளது.
கடந்த நவம்பர் மாதம் 8ஆம் தேதி ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்தார். மேலும் ஒரு குறிப்பிட்ட காலகெடுவும் கொடுத்து மக்கள் தங்களிடம் இருக்கும் பழைய நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம் என்றும் அவர் அறிவித்தார்.
இதற்காக மக்கள் தங்கள் அன்றாட பணிகளை விட்டு விட்டு வங்கி வாயில்கள் காத்திருந்து பழைய நோட்டுகளை மாற்றிக் கொண்டனர். அதேபோல் பிரதமர் நரேந்திர மோடியின் தாய் ஹீராபென் மோடியும் காந்தி நகரில் உள்ள ஒரு வங்கியில் தன்னிடம் இருந்த பழைய நோட்டுகளை மாற்றினார்.
இளைய மகனுடன்
தன் மகன் பிரதமராக இருக்கும் போதிலும் 97 வயதாகும் ஹீராபென் காந்தி நகரில் புறநகர் பகுதியில் இளைய மகனான பங்கஜ் மோடியுடன் சாதாரண வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டவுடன் தன்னிடம் ரூ. 4,500 மதிப்புள்ள பழைய நோட்டுகளுடன் ரைசான் கிராமத்தில் உள்ள ஓரியண்டல் பேங்க் ஆப் காமர்ஸ் வங்கியில் சக்கர நாற்காலியில் சென்று வரிசையில் நின்றார்.
பணத்தை பெற்றார்
பின்னர் தனது முறை வந்தபோது அதற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து பழைய நோட்டுகளை வங்கி அதிகாரிகளிடம் கொடுத்த அவர் புதிய ரூ.2000 நோட்டுகளை பெற்றுக் கொண்டார். இதையடுத்து அந்த நோட்டுகளை செய்தியாளர்களிடமும் காண்பித்தார்.
நெகிழ்ச்சி
மகன் பிரதமராக இருக்கும் போதிலும் இந்த தள்ளாத வயதிலும் மகனின் பெயரை துஷ்பிரயோகம் செய்யாமல் வரிசையில் நின்று நோட்டுகளை மாற்றியதை பார்த்த அப்பகுதி மக்கள் நெகிழ்ச்சி அடைந்தனர்.
அரசு மருத்துவமனையில் சிகிச்சை
மிகவும் எளிமையாக இருக்கும் ஹீராபென், எங்கு சென்றாலும் அரசு பேருந்துகளில்தான் செல்வாராம். உடல்நிலை சரியில்லை என்றாலும் ஆட்டோவில் காந்தி நகர் அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெறுவார் என்று நெகிழ்ச்சியுடன் அப்பகுதி மக்கள் கூறினர்.