தூய்மை நகர பட்டியலில் மாயமான மோடியின் வாரணாசி .. இது ஸ்வச் பாரத் காமெடி!
லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலத்தில் தூய்மை நகரங்களுக்காக நடைபெற்ற போட்டியில் பிரதமர் மோடியின் தொகுதியான வாரணாசி இடம் பெறாதது சமூக ஆர்வலர்கள் மத்தியில் கேள்வியை எழுப்பியுள்ளது.
கடந்த 2014ம் ஆண்டு லோக்சபா தேர்தலின் சமயத்திலிருந்தே பிரதமர் மோடி 'தூய்மை இந்தியா' திட்டத்தை முக்கிய குறிக்கோளாக பரப்புரை செய்து வருகிறார். தேர்தலில் வென்று ஆட்சிக் கட்டிலில் வந்து அமர்ந்த பின்னரும் அதை தீவிரமாக பல இடங்களில் செயல்படுத்தியும் வருகிறார். அதற்காக கோடிக் கணக்கில் நிதியும் செலவிடப்பட்டு வருகிறது.
தூய்மை இந்தியா திட்டத்தை ஊக்கப்படுத்தும் முயற்சியாக நாடு முழுவதிலும் சுத்தமாக உள்ள நகரங்கள் பட்டியல் வெளியிட்டு, பரிசும் வழங்கப்படுகிறது. அதன்படி உத்தரப்பிரதேச மாநிலத்தில் கழிவு நீர் மேலாண்மை, கழிப்பிட வசதி உள்ளிட்ட 20 தகுதிகள் சரியாக அமையும் விதமாக இருக்கும் 'தூய்மையான நகரம்' என்ற போட்டி வைக்கப்பட்டது.
மொத்தம் 10 அம்சங்களை முன்வைத்து இந்த போட்டி நடத்தப்பட்டது. குறிப்பாக, திடக்கழிவு மேலாண்மை, கழிப்பிட வசதி, நகரின் உள்கட்டமைப்பு உள்ளிட்ட அளவுகோல்கள் முக்கியமாக பார்க்கப்பட்டன. அதில், தூய்மைக்காக என்று குறிப்பிடப்பட்ட எந்த தகுதியும் இன்றி பிரதமர் மோடியின் நாடாளுமன்ற தொகுதியான வாரணாசி பின்னுக்கு தள்ளப்பட்டு உள்ளது.
கடந்த 2017ம் ஆண்டு தேசிய அளவில் தூய்மை நகரங்கள் என்ற பட்டியலில் 32வது இடத்தை வாரணாசி நகரம் பிடித்திருந்தது. அதற்கு முன்னதாக 2015ம் ஆண்டில் நடத்தப்பட்ட போட்டியில் மொத்தமுள்ள 476 நகரங்கள் பட்டியலில் வாரணாசி 418வது இடத்தை பிடித்திருந்தது.
அதன்பிறகு படிப்படியாக முன்னேற்றம் கண்டாலும் தற்போது பின்னடைவை சந்தித்திருப்பது எதனால் என்று வாரணாசி தொகுதியின் வளர்ச்சி பணியில் உள்ள அதிகாரிகள் மண்டையை பிய்த்துக் கொண்டுள்ளனர். இது ஒருபுறமிருக்க தூய்மை இந்தியா என்று பேசி வரும் மோடி, தனது சொந்த தொகுதியான வாரணாசியில் தூய்மை பற்றி கவனிக்காதது ஏன் என்று சமூக ஆர்வலர்கள், எதிர்கட்சியினர், பொதுமக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.