ராகுல்-மோடி சந்திப்பு, சோனியா மகிழ்ச்சி...நேற்றைய நாடாளுமன்றக் கூட்டுத்தொடரின் சில ருசிகர சம்பவங்கள்
டெல்லி : நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்திக்கு பிரதமர் நரேந்திர மோடி வணக்கம் கூறி வாழ்த்துகளைத் தெரிவித்தார்..
லோக்சபா மற்றும் ராஜ்யசபா உறுப்பினர்கள் இணைந்த கூட்டுக் கூட்டத்தில் நேற்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உரை நிகழ்த்தினார். காலை 11 மணிக்கு நாடாளுமன்ற மைய மண்டபத்துக்கு உரையாற்ற வந்த பிரணாப் முகர்ஜிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, ஜனாதிபதியின் உரை சுமார் 55 நிமிடங்கள் நிகழ்த்தப்பட்டது.
ஜனாதிபதி உரையின் சிறப்பம்சங்கள் தவிர நேற்றைய இரு சபைகளின் கூட்டுத் தொடரில் பல ருசிகர சம்பவங்கள் நடந்தன. இதோ அவைகளின் சிறு தொகுப்பு...

போதிய இடமில்லை...
நேற்று நடந்தது இரு சபைகளின் கூட்டு கூட்டம் என்பதால் மண்டபம் நிரம்பி வழிந்தது. இருக்கைகள் கிடைக்காமல் சந்தன் மித்ரா, பபுல் சுப்ரியா, ராஜ்யவர்தன் ரதோர், மனோஜ் திவாரி உள்ளிட்ட பல எம்.பி.க்கள் நின்று கொண்டே கூட்டத்தில் பங்கேற்றனர்.

கட்சி வேறுபாடுகளை மறந்த எம்.பிக்கள்...
கூட்டத்தில் கலந்து கொண்ட எம்.பி.க்கள் கட்சி வேறுபாடுகளை மறந்து ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டது கண்கொள்ளாக் காட்சியாக அமைந்திருந்தது.

அருகருகே அமர்ந்திருந்த முக்கிய தலைவர்கள்...
முதல் வரிசையில் பிரதமர் நரேந்திர மோடிக்கு அருகில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அமர்ந்திருந்தார். அதேபோல், முதல் வரிசையிலேயே காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், பாஜக மூத்த தலைவர் அத்வானியும் அருகருகே அமர்ந்திருந்தனர். அதே வரிசையில் முன்னாள் பிரதமர் தேவகவுடாவும், நிதியமைச்சர் அருண்ஜெட்லியும் கூட இருந்தனர்.

காங். தலைவர்கள்...
நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேயும், ராஜ்யசபா காங்கிரஸ் கட்சியின் தலைவர் குலாம்நபி ஆசாத்தும் அருகருகே அமர்ந்து இருந்தனர்.

வாழ்த்து...
குடியரசுத்தலைவர் தனது உரையை தொடங்குவதற்கு முன்னதாக தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சரான ரவிசங்கர் பிரசாத் ஒவ்வொரு வரிசையாக சென்று அனைத்து எம்.பி.க்களுக்கும் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

8வது வரிசையில் ராகுல்...
எட்டாவது வரிசையில் அமர்ந்திருந்தார் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி. அவருக்கு அருகில் காங்கிரஸ் தலைவர்கள் மோதிலால் வோரா, ஜெய்ராம் ரமேஷ் ஆகியோர் அமர்ந்திருந்தனர்.

மோடி - ராகுல் சந்திப்பு...
வழக்கமான ஸ்டைலில் குர்தா-ஜாக்கெட் அணிந்து வந்திருந்தார் பிரதமர் மோடி. மண்டபத்திற்குள் ராகுலைக் கண்டதும் இரு கரங்களையும் கூப்பியபடி அவருக்கு அருகில் சென்று வணக்கம் தெரிவித்தார். அப்போது அவர் ராகுல் காந்தியின் கையை பற்றினார்.

முதல் தடவை...
ராகுல் காந்தியும் எழுந்து நின்று புன்னகையுடன் வணக்கம் தெரிவித்தார். அப்போது இருவரும் ஏதோ பேசிக்கொண்டனர். தேர்தல் பிரச்சாரத்தின் போது ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்துக் கொண்ட மோடியும், ராகுலும் தேர்தலுக்கு பிறகு நேரில் சந்தித்து வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டது இதுவே முதல் தடவை ஆகும்.

சோனியா மகிழ்ச்சி...
பெண்களுக்கு எதிரான வன்முறை செயல்களை அரசாங்கம் சகித்துக் கொள்ளாது என்றும், நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டசபைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதில் அரசு உறுதியாக இருக்கிறது என்றும், கங்கையை சுத்தப்படுத்தும் திட்டம் குறித்தும், பேச்சினூடே மகாத்மா காந்தியின் பெயரை ஜனாதிபதி தனது உரையில் குறிப்பிட்ட போதும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மேஜையை தட்டி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

பிரதமர்களும் மகிழ்ச்சி...
மேற்கூறிய சமயங்களில் சோனியா போலவே மோடி மற்றும் மன்மோகன் சிங் ஆகியோரும் மேஜையை தட்டி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.

எம்.பிக்களின் ஆரவாரம்...
கங்கையை சுத்தப்படுத்தும் திட்டம் பற்றியும், காஷ்மீர் மாநில பண்டிட்டுகள் அவர்கள் சொந்த பூமிக்கு திரும்பவேண்டும் என்பதில் அரசாங்கம் உறுதி பூண்டிருக்கிறது என்று ஜனாதிபதி கூறிய போது அதிகபட்ச எம்.பி.க்கள் மேஜையை தட்டி வரவேற்றது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications