ராஜஸ்தானில் பயங்கர சாலை விபத்து.. மோடி மனைவி யசோதாபென் காயங்களுடன் உயிர்தப்பினார்.. டிரைவர் பலி
ஜெய்ப்பூர்: பிரதமர் மோடியின் மனைவி யசோதா பென், ராஜஸ்தானில் நடந்த சாலை விபத்தில் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நரேந்திர மோடிக்குக்கும், யசோதா பென்னுக்கும், 1968ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. ஆனால், மூன்றே வருடங்களில் இருவரும் பிரிந்துவிட்டனர்.
நரேந்திர மோடி பிரதமரான பிறகுதான் இந்த விஷயம் சில காலம் பேசு பொருளாக மாறியது. பிறகு மக்கள் மறந்துவிட்டனர்.

சாலை விபத்து
இந்த நிலையில், ராஜஸ்தான் மாநிலம் கோடா - சித்தூர் நெடுஞ்சாலையில் இன்று நடந்த சாலை விபத்தில் யசோதாபென் சென்ற கார் விபத்திற்குள்ளாகி கடுமையாக சேதமடைந்தது. அட்ரூ பகுதியில் இருந்து உதய்ப்பூர் நோக்கி கார் சென்றபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

டிரைவர் கதி
முன்னாள் சென்ற லாரி திடீரென பிரேக் போட்டதால், பின்னால் இருந்து சென்ற யசோதாபென் பயணித்த கார் அந்த லாரியின் பின் பக்கத்தில் மோதியது.
கார் முன்பகுதி அப்பளம் போல நொறுங்கியது. இந்த விபத்தில், யசோதாபென் பயணித்த காரை ஓட்டிச் சென்ற பசந்த் என்பவர் பலியானார்.

யசோதாபென்னுக்கு சிகிச்சை
காயமடைந்த யசோதாபென் சித்தூர்கர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். யசோதாபெனுக்கு தலையில் லேசான காயம் ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. திருமண நிகழ்ச்சியொன்றில் பங்கேற்றுவிட்டு குஜராத் திரும்பியபோது இந்த சம்பவம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. இதனால் பரபரப்பு நிலவுகிறது.
|
கமாண்டோ வீரர் படுகாயம்
யசோதாபென்னுடன் அதே காரில் பயணித்த அவரின் பாதுகாப்பு கமாண்டோ படுகாயமடைந்துள்ளார். மேலும் இரு பெண்கள் லேசான காயங்களுடன் தப்பியுள்ளனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications