பிரதமர் மோடியின் சமரச பேச்சு தோல்வி... 2 மத்திய அமைச்சர்கள் ராஜினாமா!
தெலுங்குதேசம் கட்சியின் தலைவரும் ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடுவுடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் உரையாடியுள்ளார்.
Recommended Video
டெல்லி: ஆந்திர மாநிலத்திற்கு தனி அந்தஸ்து தருவதில் மத்திய அரசு மறுப்பு தெரிவிப்பதால் கூட்டணியில் இருந்து வெளியேற முடிவு செய்த நிலையில் திடீர் திருப்பமாக தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடுவுடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் உரையாடியுள்ளார். எனினும் பிரதமரின் முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது, தெலுங்குதேசம் கட்சியின் 2 அமைச்சர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.
ஆந்திராவின் நீண்ட நாள் கோரிக்கையான சிறப்பு அந்தஸ்து வழங்குவதற்கு தொடர்ந்து மத்திய அரசு காலதாமதம் செய்து வந்த நிலையில், 2014 தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்த தெலுங்கு தேசம் கட்சியின் நம்பிக்கையையும் மத்திய அரசு தவிடுபொடியாக்கியது.
ஆந்திராவிற்கு தனி அந்தஸ்து தர முடியாது என்று கூறியதால் அதிருப்தியடைந்த சந்திரபாபு நாயுடு மத்திய அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் தெலுங்கு தேசம் கட்சியின் அமைச்சர்கள் இருவரை ராஜினாமா செய்ய வைக்க முடிவு செய்தார். ஆனால் இவர்களை முந்திக் கொண்டு சந்திரபாபு அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த பாஜக அமைச்சர்கள் இரண்டு பேர் இன்று தங்களது ராஜினாமா கடிதத்தை முதல்வரிடம் அளித்தனர்.
இதனால் எந்த நேரத்தில் வேண்டுமானால் தெலுங்குதேசம் கட்சி, பாஜக பிளவுபட்டதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பிரதமர் நரேந்திர மோடி சந்திரபாபு நாயுடுவை தொலைபேசியில் அழைத்து பேசினார். எனினும் இந்த சமரச பேச்சுவார்த்தை தோல்வியில் தான் முடிந்துள்ளது.
ஏனெனில் தெலுங்கு தேசம் கட்சியின் இரண்டு அமைச்சர்கள் அசோக் கஜபதி ராஜூ மற்றும் ஒய்எஸ் சௌத்ரி இருவரும் பிரதமரை அவரது இல்லத்தில் சந்தித்துள்ளனர். தெலுங்கு தேசம் கட்சியின் கொடியுடன் பிரதமர் வீட்டிற்கு சென்ற அமைச்சர்கள் தங்களது ராஜினாமா கடிதத்தை மோடியிடம் அளித்துள்ளனர்.