பெங்களூர் அருகே.. காவல் நிலையத்திற்குள்ளேயே துப்பாக்கியால் சுட்டு இன்ஸ்பெக்டர் தற்கொலை!
கோலார்: பெங்களூர் அருகேயுள்ள மாலூர் காவல் நிலையத்தில், அதன் இன்ஸ்பெக்டர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரின் புறநகர் பகுதி மாலூர். கோலார் மாவட்டத்தில் அமைந்த நகரம். இதன் காவல் நிலையத்தில் சர்க்கிள் இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர் ராகவேந்திரா. கோலார் மாவட்டம், நரசபுரா பகுதிதான் இவரது சொந்த ஊராகும்.
2003ம் ஆண்டு பேட்ஜ் அதிகாரியான இவர், முதலில் பெங்களூரின் புறநகர் பகுதிகளான சர்ஜாபுரா, நந்தகுடி காவல் நிலையங்களில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார்.
2 வருடங்களுக்கு முன்பு இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு பெற்ற ராகவேந்திரா, மாலூர் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்தார். கொலை வழக்குகளை சிறப்பாக துப்பறிந்து குற்றவாளிகளை கைது செய்வதில் தேர்ந்தவர் என்ற நற்பெயரை ஈட்டியிருந்தார்.
இந்நிலையில் நேற்று இரவு காவல் நிலையத்திற்கு வந்த ராகவேந்திரா, அதிகாலை நேரத்தில் தனது அறைக்குள் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். அவரது தலையை குறி பார்த்து துப்பாக்கியால் சுட்டுள்ளார் ராகவேந்திரா. அந்த துப்பாக்கி குண்டு தலை வழியாக வெளியேறி, காவல் நிலைய கண்ணாடி ஜன்னலையும், உடைத்து வெளியேறியுள்ளது.
தகவலறிந்த போலீஸ் எஸ்.பி. திவ்யா கோபிநாத், சம்பவ இடத்திற்கு சென்று பரிசீலனை நடத்தினார். தனது தற்கொலைக்கு யாரும் காரணமில்லை என ராகவேந்திரா எழுதி வைத்திருந்த தற்கொலை குறிப்பை, போலீசார் கைப்பற்றியுள்ளனர். கர்நாடகாவில் சமீப காலமாக பணியிலிருக்கும் போலீசார் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்கள் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.