சோஷியல் மீடியா அஸ்திரம்.. குஜராத் தேர்தலில் சூடு பிடித்த மோதல்.. பாஜக பிளான்.. ஆம் ஆத்மி புது ரூட்!
காந்திநகர்: குஜராத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் அரசியல் கட்சிகள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி வாக்காளர்களை ஒன்றிணைக்க முயன்று வருகின்றனர்.
பேஸ்புக், யூடியூப், ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் பாஜக பிரசாரத்தை மேற்கொண்டிருக்க, காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் வாட்ஸ்அப் வழியாக பிரசாரத்தை மேற்கொண்டிருக்கின்றன.
பாஜக தங்களது 27 ஆண்டுக்கால சாதனைகளை சொல்லி வாக்கு சேகரித்து வருகிறது. காங்கிரஸ் அதற்கு முன்னர் செய்த சாதனைகளை சொல்லி வாக்கு சேகரிக்க தொடங்கியுள்ளது. ஆம் ஆதமி வாக்குறுதிகளை நம்பி களத்தில் இறங்கியுள்ளது.

தேர்தல்
குஜராத் மாநிலத்தில் உள்ள 182 சட்டப் பேரவை தொகுதிகளுக்கான தேர்தல் டிசம்பர் 1 மற்றும் டிசம்பர் 5 என இரண்டு கட்டமாக நடைபெறுகிறது. முதல் கட்டத்தில் 89 தொகுதிகளுக்கும் இரண்டாம் கட்டமாக 93 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில், அரசியல் கட்சிகள் தங்கள் பிரசாரங்களை தீவிரப்படுத்தியுள்ளனர். உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் என மாநில முதலமைச்சர்களை பாஜக களம் இறக்கி பேரணி பொதுக்கூட்டம் என திட்டமிட்டுள்ள நிலையில், உள்ளூர் தலைவர்களை வைத்து வீடு வீடாக சென்று பிரசாரத்தை மேற்கொள்ள காங்கிரஸ் யோசித்திருக்கிறது. இது இவ்வாறு இருக்கையில், சமூக ஊடகம் மூலம் வாக்காளர்களை ஒன்றிணைக்கவும் அரசியல் கட்சிகள் தீவிரமாக பணியாற்றி வருகின்றன.

பாஜக
பாஜகவை பொருத்த அளவில் பேஸ்புக், யூடியூப், ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவற்றை பெரிதளவும் அக்கட்சி நம்பியிருக்கிறது. பாஜக குஜராத் தலைமையின் கீழ் செயல்படும் அதிகாரப்பூர்வ பேஸ்புக் கணக்கை 35 லட்சத்திற்கும் அதிகமானோர் பின்தொடர்கிறார்கள். அதேபோல இன்ஸ்டாகிராமில் 57.8 லட்சம், ட்விட்டரில் 1.5 லட்சம், யூடியூப்பில் 45,600 பேர் என பாஜக சமூக ஊடகத்தில் யானை பலத்தை கொண்டிருக்கிறது. இதன் மூலம் பெருவாரியான வாக்காளர்களை கவர கட்சி திட்டமிட்டுள்ளது. கட்சியின் சமூக ஊடக துறையின் இணைப் பொறுப்பாளர் மனன் டானி செய்தியாளர்களிடம் பேட்டியளிக்கையில்,

புதிய முழக்கங்கள்
"சமூக ஊடகங்கள் மூலம் நாங்கள் இதுவரை 5 பிரசாரங்களை நடத்தி இருக்கிறோம். மேலும் பல பிரசாரங்களை திட்டமிட்டு வருகிறோம். விரைவில் இவை நடத்தி முடிக்கப்படும். மட்டுமல்லாது 'கடந்த 20 ஆண்டுகளின் நம்பிக்கை மற்றும் வளர்ச்சி', 'மோடியின் பொன்னான 20 ஆண்டுகள்', 'வந்தே பாரத்', 'பாஜக என்றால் நம்பிக்கை' என பல புதிய முழக்கங்களையும் நாங்கள் உருவாக்கியுள்ளோம்" என்றும் மனன் டானி கூறியுள்ளார். இந்த பிரசாரம் தேர்தல் முடிவுகளில் எதிரொலிக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ்
காங்கிரஸை பொருத்த அளவில், பேஸ்புக்கில் 7 லட்சம், இன்ஸ்டாகிராமில் 64.3 லட்சம், ட்விட்டரில் 1.6 லட்சம், யூடியூப்பில் 9 லட்சம் பின்தொடர்பாளர்களை கொண்டிருக்கிறது. இதன் மூலம் பாஜகவுக்கு காங்கிரஸ் எந்த விதத்திலும் சலித்ததில்லை என்பது தெரிய வருகிறது. எனவே இரு கட்சிகளும் தங்களது 'ஐடி விங்கை' முழு வேகத்தில் இயக்கி வருகின்றன. கடந்த 2001-2014 வரை குஜராத் முதலமைச்சராக நரேந்திர மோடி பணியாற்றியபோது செய்த சாதனைகளையும், குஜராத் மாநிலத்தின் கடந்த 27 ஆண்டுக்கால வளர்ச்சியையும் பாஜக பிரசாரமாக கொண்டு சென்றிருக்கிறது. அதேபோல 27 ஆண்டுகளில் பாஜக செய்த தவறுகள், 27 ஆண்டுகளுக்கு முன்னர் காங்கிரஸ் உருவாக்கிய கட்டமைப்பு ஆகியவற்றுடன் தற்போதைய செயல்திட்டத்தையும் காங்கிரஸ் பிரசாரம் செய்து வருகிறது.

ஆம் ஆத்மி
ஆம் ஆத்மியை பொறுத்த வரையில் குஜராத் மாநிலத்திற்கென தனியாக தனியாக யுடியூப் பக்கம் கிடையது. ஆனால் தேசிய அளவில் கட்சிக்கு யுடியூப் பக்கம் இருக்கிறது. இதனை 42.3 லட்சம் பேர் பின்தொடர்கிறார்கள். கட்சியின் மாநில பேஸ்புக்கில் பக்கத்தை 5.67 லட்சம் பேரும், இன்ஸ்டாகிராம் பக்கத்தை 1.17 லட்சம் பேரும் பின் தொடர்கிறார்கள். எனவே இதன் மூலம் ஆம் ஆத்மி தேர்தல் வாக்குறுதிகளை மக்களிடத்தில் கொண்டு சேர்த்து வருகிறது. ஆம் ஆத்மி பாஜகவை வெளிப்படையாக விமர்சித்தாலும், குஜராத்தில் காங்கிரசுக்கு இருக்கும் சிறுபான்மையினர் வாக்குவங்கியை குறைப்பதையே நோக்கமாக கொண்டிருக்கிறது என்று அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications