ராஜ்யசபாவில் அமளி: துணை தூதர் கைதுக்கு எதிர்கட்சிகள் கண்டனம்
ராஜ்யசபாவில் பாஜக எம்.பி அருண் ஜேட்லி இந்த பிரச்சனையை எழுப்பி, இது குறித்து விவாதம் நடத்தி அமெரிக்காவிற்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
மத்திய அரசின் மெத்தனமான வெளியுறவுக் கொள்கையே இதற்கு காரணம் என்றும் அவர் குற்றம்சாட்டினார். இதன் பிறகாவது வெளியுறவுக் கொள்கையை மத்திய அரசு கடுமையாக்க வேண்டும் என்றும் அருண் ஜேட்லி கேட்டுக் கொண்டார்.
நட்புக் கரம் நீட்டும் நாடுகளுடன் மட்டும் உறவு வைத்துக் கொள்ளலாம் என்று கருத்து கூறிய ஜேட்லி, எந்த நாட்டினிடமும் சரணடைய தேவையில்லை என்று வலியுறுத்தினார்.
தி.மு.க., உறுப்பினர் கனிமொழி பேசுகையில், 'ஒரு இந்திய பெண்ணுக்கு ஏற்பட்ட அவதிமதிப்பை பொறுத்துக் கொள்ள முடியாது. இந்த சம்பவத்தின் மூலம், இந்திய வெளியுறவுக் கொள்கையை மறு ஆய்வு செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இந்தியா, தனது கடுமையான எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும்,' என்றார்.
இந்த விவாதத்தில் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர் சீதாராம் யெச்சூரி உள்ளிட்ட பல தலைவர்கள் பங்கு பெற்றனர். இந்த விவகாரம் குறித்து மத்திய அரசு அறிக்கை தாக்கல் செய்யும் என்று தொழில் வர்த்தக துறை அமைச்சர் ஆனந்த் சர்மா கூறினார். முன்னதாக மாநிலங்களவையில் பல்வேறு பிரச்சனைகளை எழுப்பி எதிர்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் 15 நிமிடங்களுக்கு அவை ஒத்திவைக்கப்பட்டது.
லோக்சபா ஒத்திவைப்பு
இதனிடையே மக்களவை தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. .குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 5 -ந்தேதி முதல் வரும் 20 -ந்தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இன்று பல எதிர்ப்புகளையும் மீறி வலுவான லோக்பால் மசோதா நிறைவேற்றப்பட்டது.அதனை தொடர்ந்து அறிவிக்கப்பட்டதற்கு முன்பாகவே 2 நாட்களுக்கு முன்பாகவே குளிர்கால கூட்டத்தொடர் முடிந்து விட்டது.மக்களவை தேதி குறிப்பிடபடாமல் அவைத்தலைவர் மீரா குமார் ஒத்திவைத்துள்ளார்.