பெங்களூரில் மிகக் குறைவான வாக்குகளே பதிவு.. ஊரு பக்கம் கிளம்பிய வாக்காளர்கள்!
பெங்களூர்: பெங்களூரில் வாக்குப்பதிவு சதவீதம் அரை சதத்தை கடந்தாலும் பிற தொகுதிகளை ஒப்பிட்டால் மிகவும் குறைவுதான்.
நாடாளுமன்றத்துக்கான 5ம்கட்ட தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் கர்நாடகாவில் மொத்தமுள்ள 28 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நேற்று தேர்தல் நடந்தது.
7 மணி முதல் நீண்ட கியூவில்
காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிவரை நடக்கிறது. காலை முதலே வரிசையில் காத்திருந்து மக்கள் ஆர்வமுடன் வாக்களித்தனர்.
வாஸ்து பார்த்த அமைச்சர் முனியப்பா
வாக்களிக்கும்போது சில வித்தியாசமான, சுவாரசியமான சம்பவங்களும் நடந்துவருகின்றன. மத்திய அமைச்சர் கே.எச். முனியப்பா கோலார் தொகுதியில் போட்டியிடுகிறார். அவருக்கு வாஸ்து மற்றும் ஜோதிடத்தில் அதிக நம்பிக்கையுள்ளவர். வாக்குச்சாவடிக்குள் சென்றபோது வாக்குப்பதிவு இயந்திரம் தெற்கு நோக்கி இருப்பதை பார்த்த முனியப்பா, அதை கிழக்கு நோக்கி திருப்பி வைத்து வாக்களித்தார்.
போய்ட்டாருப்பா.. திருப்பி வை...
இதனால் தேர்தல் பணியில் இருந்த அதிகாரிகள் ஒரு நிமிடம் திடுக்கிட்டனர். முனியப்பா சென்றதும் மீண்டு பழையபடியே வாக்கு பதிவு இயந்திரத்தை மாற்றி வைத்தனர்.
ஈவிஎம் எந்திரத்தில் வாந்தி எடுத்த வாக்காளர்
ஹாசன் தொகுதிக்குட்பட்ட சக்லேஷ்பூர் நகரிலுள்ள வாக்கு சாவடிக்கு வந்த வாக்காளர் ஒருவர் ஓட்டு போட்டுக்கொண்டிருந்தபோதே திடீரென வாக்குப்பதிவு இயந்திரத்தின் மீது வாந்தி எடுத்தார். இதையடுத்து வாக்குப்பதிவு இயந்திரம் மாற்றப்பட்டது. உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தாலும் வாக்களிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் அவர் வந்தபோது வாந்தி எடுத்துவிட்டதாக உறவினர்கள் தெரிவித்தனர்.
வாக்குச்சாவடி அதிகாரி மரணம்
பெல்காம் மாவட்டம் ராய்பாக் பகுதியில் தேர்தல் பணியாற்றிக்கொண்டிருந்தபோது தேர்தல் அதிகாரி பஷிர் சாப் சரியா (53) என்பவர் திடீரென சரிந்து விழுந்து மரணமடைந்தார்.
மிக மிக மந்தம்
கர்நாடகாவில் மதியம் 1 மணிவரை 33.13 சதவீத வாக்குகளே பதிவாயின. அதிலும் பெங்களூரில் வாக்குப்பதிவு மிக மிக மந்தமாகவே இருந்தது. மதியம் 2 மணிவரை வெறும் 25 சதவீத வாக்குகள் பதிவாகின. மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு முடிந்தபோது இருந்த நிலவரப்படி கர்நாடகாவின் 65 சதவிகித வாக்குப்பதிவு மட்டுமே பதிவாகியிருந்தது. தலைநகர் பெங்களூர்
நிலைமை இன்னும் மோசமாக இருந்தது. தெற்கு பெங்களூர் மற்றும் மத்திய பெங்களூர் தொகுதிகளில் தலா 55%, வடக்கு பெங்களூரில் 52%, வாக்குப் பதிவாகியிருந்தது. கடந்த 2009ம் ஆண்டு தேர்தலில் பெங்களூரில் 44.7 சதவீத வாக்குகளும், ஒட்டுமொத்த கர்நாடகாவில் 58.81 சதவீத வாக்குகளும்தான் பதிவாகி இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இம்முறை பெங்களூரின் மூன்று தொகுதிகளின் சராசரி வாக்குப்பதிவு சதவீதம் அரைசதம் கடந்து அதாவது 54 சதவீதமாக இருப்பதே ஓரளவுக்கு முன்னேற்றம்தான்.
வெளியூர்
பெங்களூரில் வெளியூர்கள் மற்றும் வெளிமாநில ஆட்களே அதிகம் உள்ளனர். இன்று வாக்குப்பதிவுக்காக விடுமுறை, நாளைபுனித வெள்ளிக்காக விடுமுறை, அடுத்து சனி, ஞாயிறு விடுமுறை. இப்படி மொத்தமாக 4 நாட்கள் விடுமுறை கிடைத்ததால் பலர் வாக்களிக்காமல் தங்கள் ஊர்களுக்கு சென்றிருக்கக்கூடும் என்று கருதப்படுகிறது. வாக்குப்பதிவுக்கு முந்தையநாள் இரவு தமிழகம் செல்லும் பஸ்களில் கூட்டம் அலைமோதியதே இதற்கு சாட்சி. பெங்களூரி வாக்குப்பதிவு குறைவாக இருந்தது குறித்து டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் அதிகம் விவாதிக்கப்பட்டது.
குரங்குகள்
தாவணகரேவில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடிக்குள் திடீர் என்று குரங்குகள் புகுந்ததால் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. பின்னர் வனத்துறை அதிகாரிகள் வந்து குரங்குகளை விரட்டிய பிறகு வாக்குப்பதிவு தொடர்ந்தது.
107 வயது சுவாமி
தும்கூர் சித்தகங்கா மடாதிபதி சிவகுமாரசாமி. இவருக்கு 107 வயதாகிறது. பிற்பகல் தும்கூரிலுள்ள வாக்குச்சாவடியில் வரிசையில் நின்று சிவகுமாரசாமி வாக்களித்தார்.
குடிமகன் தொல்லை...
பெங்களூர் ஊரக தொகுதி நெலமங்களாவில் குடிபோதையில் வாக்களிக்க வந்த ஆசாமி வாக்குப்பதிவு இயந்திரத்தை அடித்து நொறுக்க முற்பட்டார். போலீசார் அவரை கைது செய்தனர்.
விரல் வித்தை...
கர்நாடகத்தில் சமீபத்தில் தான் சட்டமன்றத் தேர்தல் நடந்து முடிந்ததால் இந்த முறை இடது கை ஆள்காட்டி விரலுக்குப் பதிலாக கட்டை விரலில் தான் மை வைக்கப்படுகிறது. ஆனால், வாக்களிக்க சென்ற பெங்களூர் தெற்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் நந்தன் நீலகேனி மற்றும் அவரது குடும்பதாருக்கு மட்டும் பெருவிரலுக்கு பதிலாக ஆள்காட்டி விரலில் மையை தடவி தேர்தல் அதிகாரிகள் ஆச்சரியம் அளித்தனர்.