பெங்களூருவுக்குள் நுழைய விஎச்பி தலைவர் தொகாடியாவுக்கு தடை! ஜனநாயக விரோதம் என்கிறது பாஜக
பெங்களூரு: பெங்களூரு நகருக்குள் நுழைவதற்கு விஷ்வ ஹிந்து பரிஷத் தலைவர் பிரவிண் தொகாடியாவிற்கு நகர போலீஸ் கமிஷனர் எம்.என். ரெட்டி தடை உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: பெங்களூரு நகர எல்லைக்குட்பட்ட பசவனகுடியில் வரும் 8ம் தேதி இந்து அமைப்புகள் சார்பில் மாநாடு நடைபெற உள்ளது. இதில் விஷ்வ ஹிந்து பரிஷத்அமைப்பின் தலைவர் பிரவின்தொகாடியா கலந்து கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரவின் தொகாடியா சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து வருகிறார். இந்நிலையி்ல் மாநாட்டில் கலந்து கொள்வதன் மூலம் நகரி்ல் சட்ட ஒழுங்கு பாதிக்கப்படும்.
எனவே அவர் பெங்களூரு நகருக்குள் நுழைவதற்கு வரும் 5-ம் தேதி முதல் 11-ம் தேதி வரையில் தடை விதிக்கப்படுகிறது என கூறியுள்ளார்.
முதல்வர் சித்தராமையா கூறுகையில், எந்த ஒரு அமைப்பு சட்டம்-ஒழுங்கை கெடுக்க முயன்றாலும், அதை அரசு அனுமதிக்காது என்றார். எதிர்க்கட்சி தலைவர் (பாஜக) ஜெகதீஷ் ஷெட்டர் கூறுகையில், பெங்களூரு போலீசார் மற்றும் கர்நாடக அரசின் முடிவு, ஜனநாயக விரோதமானது. அரசியலமைப்புக்கு எதிரானது. பிரவின் தொகாடியா கடந்த ஒரு மாதமாக கர்நாடகாவில் பல நிகழ்ச்சிகளில் பேசியுள்ளார். எங்கும் சட்டம்-ஒழுங்கை அவர் கெடுக்கவில்லை என்றார்.
விராட் ஹிந்து சமாஜோத்சவா என்ற நிகழ்ச்சியில் தொகாடியா பேசுவதாக இருந்தது குறிப்பிடத்தக்கது.