டாக்டர் ஷினு.. நோயாளியை ஜி. எச்சுக்கு அனுப்பியது தப்பு.. டிஸ்மிஸ் செய்த தனியார் ஆஸ்பத்திரி!
திருச்சூர்: கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளான நோயாளி குறித்த தகவலை அரசுக்கு அளித்தது குற்றம் என்று கூறி ஒரு டாக்டரை பணியிலிருந்து நீக்கியுள்ளது கேரளாவைச் சேர்ந்த தனியார் மருத்துவமனை.. இந்த செயல் கேரளாவை அதிர வைத்துள்ளது. அந்த மருத்துவமனையின் செயலுக்கு தற்போது கண்டனங்கள் குவிந்து வருகின்றன.
Recommended Video
சீனாவில் தொடங்கிய கொரோனா அக்கப் போர் இப்போது அக்கம் பக்கத்து நாடுகளுக்கும் பரவி இந்தியா வரைக்கும் வந்து விட்டது. இந்தியாவில் இந்த நோய் பரவத் தொடங்கியதுமே மத்திய அரசும், அனைத்து மாநில அரசுகளும் போர்க்கால அடிப்படையில் களத்தில் இறங்கி விட்டன. விழிப்புணர்வு, முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டன.
கொரோனா பாதிப்புடன் யாராவது இருந்தால் அல்லது சந்தேகம் வந்தாலே உடனடியாக அரசு மருத்துவமனைகளுக்கு தகவல் தர வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அதிலும் கேரளாவில் இதுதொடர்பாக அரசாணையே பிறப்பிக்கப்பட்டு விட்டது. தகவல் தெரிந்தும் தெரிவிக்காமல் மறுத்தால் சட்டவிரோதம் என்று அந்த மாநிலஅரசே உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் புதிதாக யாருக்கும் கொரோனா இல்லை.. எல்லாம் நெகட்டிவ்.. விஜயபாஸ்கர் செம குட் நியூஸ்!
ஆனால் தெரிந்த தகவலை கூறப் போய் ஒரு டாக்டர் தனது வேலையை இழந்துள்ளார். இதுதான் அதிர்ச்சியாக உள்ளது. அந்த டாக்டரின் பெயர் ஷினு ஷியாமளன். கேரள மாநிலம் திருச்சூர், தளிக்குளம் பகுதியில் உள்ள ரோஷ் கிளினிக் என்ற தனியார் மருத்துவமனையில் டாக்டராக இருந்தவர். இவரைத்தான் அந்த மருத்துவமனை நிர்வாகம் வேலையை விட்டு நீக்கியுள்ளது. காரணம், தனது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்த கொரோனா பாதிக்கப்பட்ட நோயாளி குறித்து அரசுக்குத் தகவல் கொடுத்தார் என்பது.
இப்படி வந்த நோயாளியை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி விட்டால் நம்ம பிழைப்பு என்னாவது, நமது வருமானம் பாதிக்காதா என்று கோபமடைந்து அந்த மருத்துவமனை நிர்வாகம் இப்படி நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் நான் என் கடமையைத்தானே செய்தேன். சட்டப்படிதானே நடந்தேன். அரசு கூறியபடிதானே நடந்து கொண்டேன்.. நான் என்ன தவறு செய்தேன் என்று அடுக்கடுக்காக கேள்வி எழுப்புகிறார் டாக்டர் ஷினு.
டாக்டர் ஷினு இதுதொடர்பாக கூறுகையில், "நான் ஒரு டாக்டராக எனது கடமையைச் செய்தேன். இதுபோல நோயாளிகள் வந்தால் சுகாதாரத் துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இது அரசு உத்தரவு. எனவேதான் நான் அரசு மருத்துவமனைக்கு போகுமாறு அந்த நோயாளியிடம் தெரிவித்தேன். அவர் போக மறுத்தார். மேலும் தான் தோஹா போக வேண்டும் என்றும் கூறினார். இதையடுத்து நான் அரசு உத்தரவுப்படி சுகாதாரத் துறைக்குத் தகவல் தெரிவித்தேன். இன்று எனது வேலையை இழந்துள்ளேன்" என்று கூறுகிறார் ஷினு.
2012ம் ஆண்டு டாக்டர் படிப்பை முடித்த டாக்டர் ஷினு இந்த மருத்துவமனையில் முழு நேர மருத்துவராக பணியாற்றி வந்தார். கேரளாவில் தற்போது கொரோனா வேகமாக பரவி வருகிறது. அங்கு மொத்தம் 14 பேர் சிகிச்சையில் உள்ளனர். எனவே நோய் பரவாமல் தடுக்கவும், நோயால் பாதிக்கப்பட்டவர்களை கண்டறியும் பல்வேறு நடவடிக்கைகளை கேரள அரசு எடுத்து வருகிறது. இதுதொடர்பாக அனைத்து டாக்டர்களுக்கும் அரசு பல உத்தரவுகளையும் பிறப்பித்துள்ளது. அதை கடைப்பிடிக்கப் போய்த்தான் ஷினுவுக்கு வேலை போயுள்ளதாம்.
இதற்கிடையே, சம்பந்தப்பட்ட நோயாளி ஏற்கனவே கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பாக சோதனைக்குள்ளாகி இல்லை என்று ரிசல்ட் வந்தவராம். 28 நாள் தனிமையிலும் அவர் வைக்கப்பட்டவராம். இதுகுறித்து ஷினு விளக்கியபோது, "அவர் தனிமையில் இருந்தது குறித்து எனக்குத் தெரியாது. அவர் வந்தபோது இருந்த நிலைமை மற்றும் உடல் ஆரோக்கியம் ஆகியவற்றை வைத்து நான் அரசு உத்தரவுப்படி தகவல் தெரிவித்தேன். அதில் தவறே இல்லை" என்று கூறியுள்ளார்.
"அவர் என்னிடம் வந்தபோது கடுமையான காய்ச்சலுடன் இருந்தார். இதையடுத்தே நான் அவரை அரசு மருத்துவமனைக்கு போகுமாறு அறிவுறுத்தினேன். அவர் மறுத்த காரணத்தால்தான் நானே அதிகாரிகளுக்குத் தெரிவித்தேன். அவருக்கு கொரோனா வந்துள்ளதாக நான் ஒரு போதும் கூறவில்லை. சந்தேகத்தின் அடிப்படையில்தான் தகவல் தெரிவித்தேன்" என்றும் ஷினு விளக்குகிறார்.
என்னவோ.. இந்த விவகாரம் தற்போது திருச்சூரில் பரபரப்பை ஏற்படுத்தி விட்டது.