சுனந்தா மரணம்... பாக். பெண் பத்திரிக்கையாளர் மெஹர் விசாரிக்கப்படுவாரா?
டெல்லி: மத்திய அமைச்சர் சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கரின் மரணம் குறித்த விசாரணை தீவிரமடைந்துள்ளது. அவரது பிரேதப் பரிசோதனை அறிக்கைக்காக காத்திருக்கும் போலீஸ் குழு, இந்த மரணம் தொடர்பாக பாகிஸ்தான் பெண் பத்திரிக்கையாளர் மெஹர் தராரை விசாரிக்கத் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
இப்போதைக்கு சுனந்தாவின் மரணம் குறித்த சில தகவல்களை போலீஸ் வசம் உள்ளது. அவரது மரணம் இயற்கையானது அல்ல, உடனடியாக மரணமடைந்துள்ளார், உளவியல் பிரச்சினைக்கான மருந்துகளை அவர் உட்கொண்டதற்கான அறிகுறிகள் தெரிகின்றன,உடலில் காயங்கள் உள்ளன என்று டெல்லி எய்ம்ஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும் சுனந்தா மரணத்திற்கு முன்பு மது அருந்தியதற்கான ஆதாரம் இல்லை என்று தெரிய வந்துள்ளது. அதேசமயம், முழுமையான பிரேதப் பரிசோதனை அறிக்கை இன்னும் வரவில்லை. அது வந்த பிறகே காவல்துறையால் ஒரு முடிவுக்கு வர முடியும் என்று தெரிகிறது.
விசாரணை வளையத்தில் பாக். பத்திரிக்கையாளர்
இந்த நிலையில் மன ரீதியான உளைச்சலால்தான் சுனந்தா தற்கொலை செய்துள்ளார் என்ற அளவுக்கு தற்போது போலீஸார் உறுதியாக உள்ளனர். இந்த மன உளைச்சலுக்கு பாகிஸ்தான் பெண் பத்திரிக்கையாளர் மெஹர் தராருக்கும், சசி தரூருக்கும் இடையிலான கள்ளக்காதலே காரணம் என்றும் கூறப்படுவதால், மெஹரை விசாரணை வளையத்தின் கீழ் போலீஸார் கொண்டு வந்துள்ளனர்.
மெஹரிடம் எப்போது விசாரணை
இதையடுத்து மெஹரிடம் விசாரணை நடத்தவும் போலீஸார் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. ஆனால் அதை எப்படி நடத்துவது என்பது இன்னும் திட்டமிடப்படவில்லை.
தரூரை விசாரிக்கவும் திட்டம்
அதேபோல சசி தரூரை விசாரிக்கவும் காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர். அவர் சுனந்தாவின் அஸ்தியுடன் ஹரித்வாருக்குப் போயிருப்பதால் திரும்பி வந்ததும் விசாரணை நடத்தப்படும் என்று தெரிகிறது.
மரணத்திற்கான காரணத்திற்காக காத்திருக்கும் போலீஸ்
இதற்கிடையே, கள்ளக்காதல் பிரச்சினையால்தான் சுனந்தா தற்கொலை செய்து கொண்டார் என்பது உண்மையானால், மன உளைச்சலால் அவர் தற்கொலை செய்தார் என்பது உண்மையானால், மெஹர் மற்றும் சசி தரூர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்வார்கள் என்று தெரிகிறது. தற்போது சரியான காரணத்திற்காக போலீஸார் காத்துள்ளனராம்.
உடலில் வந்த காயம் எப்படி
இதற்கிடையே சுனந்தாவின் உடலில் உள்ள சிறு காயங்களால் மரணத்தை ஏற்படுத்த முடியாது என்று டாக்டர்கள் கூறினாலும், அந்தக் காயங்கள் வந்தது எப்படி என்பதை அறிவதில் போலீஸார் ஆர்வமாக உள்ளனர். காரணம், மரணத்திற்கு முன்பு யாருடனாவது சுனந்தா வாக்குவாதம் அல்லது சிறு சண்டையில் ஈடுபட்டாரா என்பதை அது உறுதிப்படுத்த உதவும் என்பதால்.
உடலின் மேல் பகுதியில் காயம்
சுனந்தாவின் உடலில் எந்த இடத்தில் காயம் உள்ளது, எத்தனை காயங்கள் உள்ளன என்பதை தெரிவிக்க டெல்லி எய்ம்ஸ் டாக்டர்கள் மறுத்துள்ளனர். அதேசமயம், உடலின் மேல் பகுதியில்தான் காயம் இருப்பதாக கூறப்படுகிறது. அதாவது கை, முகம், கன்னம், கழுத்து ஆகிய இடங்களில் இந்த காயங்கள் இருப்பதாக தெரிகிறது.
20 மணி நேரத்திற்கு முன்பு
மேலும் பிரேதப் பரிசோதனைக்காக உடல் கொண்டு வரப்பட்ட நிமிடத்திலிருந்து 15 முதல் 20 மணி நேரத்திற்கு முன்பு சுனந்தா மரணமடைந்திருக்கலாம் என்றும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். சனிக்கிழமை பிற்பகல் 12.30 மணிக்கு பிரேதப் பரிசோதனை தொடங்கியது என்பது நினைவிருக்கலாம்.
மது அருந்தவில்லை
சுனந்தா மது அருந்தியதற்கான அறிகுறிகள் இல்லை என்றும் கூறப்படுகிறது. மேலும் ஓவர்டோஸ் மருந்து சாப்பிட்டதற்கான ஆதாரமும் அவரது அறையில் கண்டெடுக்கப்படவில்லையாம்.