டெல்லியில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டிய நேரம் வந்து விட்டது - மோடி
ஹரியானா மாநிலம் ரேவரியில் நேற்று நடந்த முன்னாள் ராணுவத்தினர் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார் மோடி. பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின்னர் அவர் கலந்து கொண்ட முதல் கூட்டம் இது.
இக்கூட்டத்தில் மோடி பேசியதாவது...
இந்தியாவின் எல்லையில் சீன ஊடுறுவல், பாகிஸ்தான் ஊடுறுவர் தொடர் கதையாகவே உள்ளது. ஆனால் உண்மையான பிரச்சினை எல்லையில் இல்லை. டெல்லியில்தான் உள்ளது. இங்குள்ள தலைமைதான் சரியில்லை. எனவே எல்லைக்கு மட்டும் நாம் தீர்வு கண்டால் சரியாக இருக்காது. டெல்லியிலும் தீர்வு காணப்பட வேண்டும்.
ராணுவத்தினர் மதச்சார்பற்றவர்கள். அவர்களுக்கு மதம் கிடையாது, மொழி கிடையாது. அவர்களிடமிருந்து அரசியல்வாதிகள் கற்றுக் கொள்ள வேண்டும். ஆனால் இங்குள்ளவர்கள் வாக்கு வங்கி அரசியலைத்தான் கடைப்பிடித்து வருகிறார்கள். இது வேதனை தருகிறது. வாக்கு வங்கி அரசியலைப் பிடித்துக் கொண்டு நாட்டை கூறு கூறாக போட்டு வரும் சில அரசியல்வாதிகளுக்கு நான் சொல்ல விரும்புவது, ராணுவத்தினரைப் பார்த்து மதச்சார்பின்மையைக் கற்றுக் கொள்ளுங்கள் என்பதுதான்.
டெல்லியில் மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும். அதற்கான நேரம் வந்து விட்டது. அதை ஹரியானாவிலிருந்து தொடங்குவோம்.
மத்தியில் 2014 தேர்தலுக்குப் பிறகு வலுவான, உறுதியான மத்திய அரசு அமைய வேண்டியது அவசியம். அதை அனைவரும் உறுதிப்படுத்த வேண்டும்.
பாகிஸ்தான் வீரர்களால், இந்தியப் படையினர் எல்லையில் கொல்லப்பட்டபோது ஐக்கிய ஜனதாதள அமைச்சர் ஒருவர் அறிவிலித்தனமாக கருத்து தெரிவித்திருந்தார். இதெல்லாம் எவ்வளவு அவமானம்... எந்த ஒரு அரசியல் தலைவரும், எந்த ஒரு அரசியல் கட்சியும் மக்களை இப்படி அவமானப்படுத்தியதில்லை, ராணுவத்தினரை அவமானப்படுத்தியதில்லை. படை வீரர்களின் தியாகத்தை உங்களால் அங்கீகரிக்க முடியாவிட்டால், குறைந்தது அவர்களை அவமதிக்காமலாவது இருங்கள் என்றார் மோடி.